வெறும்கை என்பது மூடத்தனமல்ல.. கையெழுத்துப் போட்டியில் சாதித்துக் காட்டிய 10 வயது சிறுமி!
அமெரிக்காவை சேர்ந்த பிறவிலேயே கைகள் இல்லாத 10 வயது பெண் சாரா ஹின்ஸ்லி தேசிய அளவிலான கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
நியூயார்க்: அமெரிக்காவில் கைகள் இல்லாத 10 வயது பெண் தேசிய அளவிலான கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாணாகத்தில், பெடரிக் நகரில் உள்ள செயிண்ட் ஜான் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவி சாரா ஹின்ஸ்லி. 10 வயதான இந்த சிறுமிக்கு பிறவியிலேயே கைகள் இல்லை.
ஆனால் அதற்காக சோர்ந்துவிடவில்லை சாரா. பள்ளியில் சேர்ந்து, சக மாணவர்களுக்கு இணையாக போட்டிப் போட்டு படிப்பவர்.
வெற்றி:
இவர் தற்போது ஒரு பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, அமெரிக்காவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான கர்சிவ் கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஓவியம் மாதிரி:
இதுகுறித்து அவர் கூறும்போது, "எழுதுவது எனக்கு எப்போதுமே சிரமமாக இருந்ததில்லை. எழுதுவது எனக்கு சுலபமான விஷயம் தான். கர்சிவ் கையெழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். அது ஒருவகையான ஓவியம் போன்று உள்ளது", என்கிறார்.
ஆசிரியை பாராட்டு:
"சாராவிடம் இருந்து முடியாது என்ற சொல்லை கேட்டதே இல்லை. எவ்வளவு கஷ்டமான வேலையை தந்தாலும், அதை அவள் சுலபமாக, சிறப்பாக செய்துவிடுவாள்", என புகழ்ந்து தள்ளுகிறார் சாராவின் ஆசிரியை செரில்.
அம்மா பாராட்டு:
சாராவின் தாய் ஹின்ஸ்லியோ, "எந்த வேலைக்கும் சாரா எப்போதும் எந்த ஒரு துணை கருவியையும் பயன்படுத்தியதில்லை. தனது இரண்டு முழங்கைகளை பயன்படுத்தி தான் அவள் எல்லா வேலைகளையும் செய்வால். செயற்கை கைகன் பொருத்திக்கொள்ளவும் அவள் மறுத்துவிட்டாள்", என்கிறார்.
நம்பிக்கை ராணி:
மேலும், "சாரா எந்த ஒரு காரியத்தையும் தன்னால் சாதிக்க முடியும் என நம்புகிறாள். அவளுடைய இந்த நம்பிக்கை தான் அவளை எந்த காரியத்தையும் செய்ய வைத்துவிடுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் விரைவாக கற்றுக்கொள்வாள்", என்கிறார் ஹின்ஸ்லி.
ஓவியம் பிடிக்கும்:
பள்ளி நேரம் போக வீட்டில் சும்மா இருக்கும் போது, தனது அருகில் இருக்கும் விஷயங்களை ஓவியமாக வரைவது சாராவுக்கு பிடித்த விஷயம். அது போக, தனது தங்கை வெர்ணிகாவுடன் விளையாடுவது, நீச்சல் அடிப்பது, பள்ளியில் செஸ் விளையாடுவதும் சாராவுக்கு பிடித்த விஷயங்கள்.
பெருமை:
கையெழுத்து போட்டிக்கான பரிசு, வரும் ஜூன் 13ம் தேதி தான் சாராவுக்கு கிடைக்கும். அந்த நாளுக்காக சாராவின் பள்ளியே ஆர்வமாக காத்திருக்கிறது. ஏனெனில், செயிண்ட் ஜான் பள்ளியில் இருந்து இதுவரை யாருமே இந்த பரிசை வென்றது இல்லை. சாரா தான் முதல் நபர் என்கிறார் அப்பள்ளியில் தலைமை ஆசிரியை கெத்தி ஸ்மித்.