இந்த நிமிடமே நல்ல நேரம்!
நல்ல நேரத்திற்காக காத்திருக்காதீர்கள்.. நீங்கள் எதைத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த தருணம்தான் உண்மையில் நல்ல நேரம்.. கால தாமதம் செய்யாதீர்கள்.. உடனே தொடங்குங்கள் எந்த செயலையும்.
எந்த ஒரு செயலையும் தொடங்க நினைத்தால் உடனே தொடங்குங்கள். எதற்காகவும் தாமதிக்காதீர்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நம் இலக்கை அடைவதற்கான நேரம் அதிகமாகிறது. எல்லாம் நல்லநேரம் தான். நம் உழைப்பைத் தொடங்கும் நேரமே நம் வாழ்வில் வசந்தம் வீசும் நேரம்.
உங்கள் வாழ்வின் இலக்கை முதலில் நிர்ணயம் செய்யுங்கள்.பிறகு அதற்கான முயற்சிகளில் உடனே ஈடுபடுங்கள். முயற்சி திருவினையாக்கும் என்பார்கள். ஒரு செயலைச் செய்ய முடிவு எடுத்தவுடன் அதற்கான வேலைகளில் இறங்கி விட வேண்டும். இல்லையேல் கிணற்றில் போட்ட கல்லைப் போல அந்த செயல் அப்படியே நின்று விடும். தாமதிப்பதால் சில சமயங்களில் உங்கள் இலக்கை அடைய முடியாமல் கூட போகலாம்.
காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்து அலாரம் வைப்போம். அலாரம் அடித்தவுடன் அதை அணைத்து விட்டு ஒரு ஐந்து நிமிடம் தூங்கினால் என்ன என்று உறங்குவோம். பிறகு அவசர அவசரமாக அலுவலகத்திற்குக் கிளம்பி பேருந்தைத் தவற விட்டு ஆட்டோவில் சென்றிருப்போம். இந்த சூழலில் காலை உணவை மறந்தே போயிருப்போம். இப்படித்தான் தள்ளிப் போடும் ஒவ்வொரு செயலும் இறுதி நிமிடத்தில் நம்மைப் பாடாய்படுத்தும். ஒரு செயலைத் திட்டமிட்டுத் திறம்பட முடிப்பது தான் வெற்றி.
எந்த செயலையும் தள்ளிப்போடாதீர்கள். செய்யும் செயலுக்கு காலநேரம் பார்க்காமல் உடனடியாகத் திறம்பட செய்து வெற்றி வாகை சூடுங்கள். எல்லா நேரமும் நல்ல நேரம் தான் அதனால் எதைச் செய்வதென்றாலும் உடனடியாகத் தொடங்குங்கள்.