கையில திறமை.. கிடைச்ச வேலையில் அசத்தல்.. டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி!
சென்னை: படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கலையா.. டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி.. பிடிச்ச வேலையை கையில் எடுங்க.. ஜெயிக்கலாம்.
எப்பவுமே படிச்ச படிப்புக்கேற்ற வேலை பலருக்குக் கிடைப்பதில்லை. அதேசமயம், படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைத்தும் கூட பலருக்கு அதில் திருப்தியோ, நிம்மதியோ கிடைப்தில்லை. இது இயற்கையானது.
ஏன் இப்படி என்றால் அங்குதான் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது. அதுதான் நமது மனது. எந்த வேலையாக இருந்தாலும் நமது மனது ஒன்றி, லயித்துப் போய் ஈடுபட்டால்தான் அதை சுலபமாக செய்ய முடியும். படிச்சுட்டோம், வேலையும் கிடைச்சுருச்சு என்று சீட்டில் உட்கார்ந்து விட்டால் மட்டும் அந்த வேலையில் திறம்பட செய்து விடமுடியாது.
மனச்சோர்வினால் என்ன புண்ணியம்.. ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லைங்க!
லயித்துப் பாருங்கள்
மாறாக அந்த வேலையில் லயித்துப் போகும்போதுதான் அதில் மிளிர முடியும். இன்றைக்கு என்ஜீனியரிங் முடித்த பலர் நினைத்த வேலைக்குப் போக முடியாமல், கிடைத்த வேலைக்கு போகும் நிலையில் உள்ளனர். காரணம் என்ஜீனியரிங் படித்தவர்கள் அதிகமாகி விட்டனர். இதனால் திறமை உள்ளவர்களுக்கு மட்டுமே தகுதிக்கேற்ற வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் சம்பந்தமே இல்லாத வேலைகளுக்கு செல்லும் சூழல் உருவாகி விட்டது.
படிப்புக்கேற்ற வேலை
இருப்பினும் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்கலையே என்று கவலைப்படாமல் விரும்பிய வேலையில் ஈடுபடுவது சுலபமானது மட்டுமல்லாமல் அதுதான் புத்திசாலித்தனமும் கூட. உதாரணத்திற்கு உங்களுக்கு ஓவியம் தீட்ட நன்றாக வந்தால் நீங்கள் ஓவியங்களை வரைந்து விற்பனை செய்யலாம். உங்களுக்கு நல்ல பாடும் திறமை உள்ளதா. சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு பாட்டுக் கிளாஸ் எடுக்கலாம்.
எட்டாக்கனி
இன்றையக் காலக்கட்டத்தில் அனைவருக்கும் வேலை என்பது எட்டாக் கனியாக உள்ளது. கல்லூரி இறுதியாண்டிலேயே கேம்பஸ் இன்டர்வியூவில் வேலைக் கிடைத்தால் மட்டுமே வேலை என்ற நிலைக்கு நாம் வந்து விட்டோம். படித்து முடித்து கையில் சான்றிதழ்களோடு வேலை தேடி தேடி அலைந்து திரிந்து வேலை கிடைக்காமல் பலர் இன்னும் சிரமப்படுகின்றனர். வேலையில்லாப் பட்டதாரி என்று ஒரு காலத்தில் கெத்தாக சொல்லிக் கொண்டவர்கள் இன்று எனக்கு இவ்வளவு மாதங்களாகியும் வேலைக் கிட்டவில்லையே என வருந்துகிறார்கள்.
உருவாக்குங்கள்
வேலையைத் தேடி நீங்க போக வேண்டாம். உங்களுக்கான வேலைவாய்ப்பை நீங்களே உருவாக்கலாம். எப்படினு தானே கேக்கறீங்க. உங்களுக்கு நல்லா பாடம் சொல்லித் தர தெரியுமா அப்போ பிள்ளைகளுக்கு வீட்டிலேயே டியூஷன் எடுங்க. இல்லைன்னா ஆன்லைனில் வகுப்புகள் எடுத்து சம்பாதிக்கலாமே. அதிலேயே மாத வருமானம் முப்பதாயிரம் ரூபாய் முதல் ஐம்பதாயிரம் வரை சம்பாதிக்கலாம்.
பெண்கள்
திருமணத்திற்குப் பின் பல பெண்கள் தங்கள் வேலையைக் குடும்பச் சூழ்நிலைக் காரணமாக விட்டு விடுகின்றனர். அவர்களும் ஓய்வு நேரங்களில் ஏதேனும் தொழில் செய்து சம்பாதிக்கலாம். உங்களுக்கு கணினியில் ப்ரோகிராம் நன்கு எழுத தெரிந்தால் ஆன்லைனில் கம்பெனி ப்ராஜெக்ட்டுகளைச் செய்துக் கொடுக்கலாம். அதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
முயற்சி தேவை
உங்களுக்கு நல்லா தமிழ் பேச வருமா செய்தியாளராக முயற்சி செய்யுங்க. நன்றாக கதை கவிதை உங்களால் எழுத முடியுமா பிறகென்ன ப்ரீலான்சராக பணியாற்றலாம். ஒவ்வொருத்தருக்குள்ளேயும் ஒரு திறமை நிச்சயம் இருக்கு. அந்த திறமையை வெளியே கொண்டு வாருங்கள். நான் பொறியியல் படித்தேன் வேலை கிடைக்கவில்லை என்றுக் கூறாமல் உன்னுடைய திறமையை நம்பி முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.
புத்திசாலித்தனம்
எனக்கு வேலை கிடைக்கவில்லை என்றுக் கூறுவதை விட நமக்கான வேலையை உருவாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம். உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமையுங்கள். தரமான காய்கறிகளை விளைவித்துச் சந்தைப்படுத்துங்கள். காகிதப்பை தயாரிப்பு, சணல் பை தயாரிப்பு போன்றவற்றின் மூலமும் வருவாய் ஈட்டலாம். உங்களுக்குச் சமையல் நல்லா வருமா. அப்போ கவலையை விடுங்க. வீட்டிலேயே சின்னதாக ஒரு மெஸ் ஆரம்பித்து நடத்துங்கள்.
எளிதாக ஜெயிக்கலாம்
இன்று பள்ளிவிழாக்களில் பொம்மைகள் மற்றும் பலவிதமான உடைகள் பயன்படுத்துகின்றனர். தையற்கலை தெரிந்தால் போதும். விதம் விதமான டிசைன்களில் கண்கவரும் வண்ணங்களில் உடைகளைத் தயாரிக்கலாம். வீட்டிலேயே ஊறுகாய் மற்றும் மசாலாப் பொடிகளைத் தயாரித்து விற்பனை செய்யலாம். செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அதனால் நம் திறமையை நம்பி தொழிலை ஆரம்பித்து முழுமூச்சாகப் பணியாற்றினால் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். நமக்குப் பிடித்த வேலையைச் செய்யும் போது உடலும் மனமும் அந்த வேலையோடு ஒன்றி விடுகிறது. இல்லையேல் கடமைக்காக செய்யும் வேலையில் மனநிம்மதி இருக்காது.
சீக்கிரம் கிடைக்கிறது
இன்று எல்லாமே கைப்பேசியின் வாயிலாக சீக்கிரம் கிடைத்துவிடுகிறது. மளிகைச்சாமான்கள் உணவு போன்றவைகள் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே கொண்டு வந்துத் தருகிறார்கள். வண்டி ஓட்டத் தெரிந்தாலே மாதம் குறைந்தபட்சம் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம். மனசுக்குப் பிடிச்ச வேலையைச் செய்யும் போது மனமும் நிறைவுப் பெறுகிறது. அந்த வேலையில் இருக்கும் நேர்த்தியால் காசு மேல காசு வந்து உங்களிடம் கொட்டும்.
பெரிதாக தெரியாது
மனதிற்குப் பிடித்த வேலையைச் செய்யும் போது அதில் சிரமமே இருந்தாலும் அது பெரிதாக தெரியாது. வீட்டில் இருக்கும் சிலிண்டரைத் தூக்கச் சிரமப்படும் ஆண்கள் கூட தன் மனைவிகளை வேகமாக தூக்கி விடுகிறார்கள். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள் என்பார்கள். அது போல நமக்குத் தெரிந்த தொழில்களைச் செய்து வருமானம் ஈட்டலாம். ஆன்லைன் மூலம் துணிகள் வியாபாரம் செய்யலாம். பெண்மையின் அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலன்களை வாங்கி விற்கலாம்.இப்படி எத்தனையா வழிகள் இருக்கிறது.
வாழலாம்
வாழ வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் என்பது போல நாம் வேலைக் கிடைக்கவில்லை என்றுக் கூறாமல் நாம் வேலைவாய்ப்பினை உருவாக்குவோம். எனக்கு வேலைக் கிடைக்கவில்லையே என்று வருந்தாமல் என்னிடம் இருக்கும் திறமையை வைத்து என்ன தொழி்ல் செய்யலாம் என சிந்தியுங்கள். மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்தால் என்றென்றும் ஹாப்பி தான்.