பள்ளி இடை நின்ற குழந்தைகளுக்காக பஸ் டிரைவராக மாறிய உடுப்பி ஆசிரியர்
போக்குவரத்தை காரணம் காட்டி பள்ளி படிப்பு நின்று விடக் கூடாது என்று டிரைவராக மாறினார் உடுப்பி ஆசிரியர்.
உடுப்பி: போக்குவரத்தை காரணம் காட்டி எந்த மாணவரும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட கூடாது என்பதற்காக கர்நாடக மாநிலத்தில் ஒரு ஆசிரியர் பேருந்து வாங்கி அதன் டிரைவராகவே மாறிவிட்டார்.
அனைத்து மாநிலங்களில் பணத்தை காரணம் காட்டி மாணவர்கள் படிக்காமல் போய்விடக் கூடாது என்பதற்காக அரசுபள்ளிகள் உள்ளன. இதனால் பள்ளி இடைநில்லா குழந்தைகளை தடுக்கப்படுகின்றனர்.
இது மட்டுமல்லாமல் இடைநில்லா குழந்தைகளுக்காக மாநிலத்துக்கு மாநிலம் கல்விக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியரோ அரசு செய்யும் வரை காத்திருக்காமல் தானாக முன்வந்து ஒரு காரியத்தை செய்துள்ளார்.
டிரைவர்
உடுப்பி மாவட்டம் பிரம்ஹாவர் நகரில் பராலி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுற்றியுள்ள கிராமப் புற மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் விதமாக அப்பள்ளி ஆசிரியர் ராஜாராமன் பேருந்து டிரைவராக மாறியுள்ளார்.
டிரைவர் நியமனம்
பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் மினி பேருந்து வாங்குவதற்கு உதவி செய்தனர். அதை வைத்து பேருந்தை வாங்கினார் ராஜாராமன். ஆனால் குழந்தைகளை அழைத்து சென்று வர டிரைவரை நியமித்தால் அவருக்கு ஊதியம் கொடுக்க வேண்டும். அதற்கு பள்ளி நிர்வாகத்தால் முடியாது.
4 டிரிப்புகள்
எனவே தானே டிரைவராக மாறிவிட்டார். தினமும் காலை 8.10 மணிக்கு அவரது வீட்டை விட்டு ராஜாராமன் கிளம்புவார். அனைத்து மாணவர்களும் 9.20 மணிக்கு பள்ளி வகுப்பறையில் இருக்கும்படி 4 டிரிப்புகளாக பேருந்தை இயக்குவார்.
பணியை மேற்கொள்கிறார்
தான் இப்பள்ளியை விட்டு சென்றாலும் இந்த பேருந்து வசதி தொடர வேண்டும் என்று விரும்புகிறார். தற்போது இவர் விடுப்பில் சென்றுவிட்டாலும் அவரது நண்பர்களை அனுப்பி குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்கிறார்.
அர்ப்பணிப்பு குணம்
இதனால் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவர்களின் வருகை 60 முதல் 90 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை குசுமா கூறுகையில், இந்த பள்ளியில் 4 ஆசிரியர்கள்தான் உள்ளனர். அவர்களில் ராஜாராமன்தான் மிகவும் அர்ப்பணிப்பு குணம் கொண்டவர். அவர் உடற்கல்வி, அறிவியல், கணிதம், ஆகியவற்றுடன் தற்போது பேருந்தையும் இயக்குகிறார் என்றார்.