வாழ்க்கைன்னா என்ன தெரியுமா?
வாழ்க்கை என்றால் என்ன.. நம்மை நாமே கண்டுபிடித்துக் கொள்வதுதான் வாழ்க்கையா.. நிச்சயம் இல்லை.. நம்மை உருவாக்கிக் காட்டுவதே உண்மையான வாழ்க்கையாக இருக்க முடியும்.
ஒரு மனிதனின் அடையாளம் அவன் எப்படி வாழ்ந்தான் என்பதுதான். உயிருடன் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு அடையாளத்தை இறந்த பின்பு விட்டுச் செல்கிறான்.. அதுதான் அவன் வாழ்ந்த வாழ்க்கையைச் சொல்லும்.
வாழ்க்கையே வாழத்தானே அதை ஊரே நம்மைக் கொண்டாடும்படி வாழ்ந்துதான் பார்ப்போமே. அட ஆமாங்க பிறப்பு இறப்பு என்பது எல்லோருக்கும் உண்டு. ஆனால் இதற்கு இடையில் நாம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றித் தான் இறப்பிற்குப் பின்னும் உங்களைப் பற்றி உலகம் பேசும்.
காந்தியும் பாரதியும்
அஹிம்சாவைத் தானும் பின்பற்றி அதன் பெருமையை உலகிற்கு உணர்த்தினார் காந்தியடிகள். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே என்று விடுதலை வேட்கையை தன் பாடல்கள் மூலம் நம் மக்களுக்கு ஊட்டியவர் பாரதியார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச் சென்ற செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் போன்றவர்களையும் உலகம் இன்றளவும் மறக்கவில்லை.
அப்துல் கலாம்
விண்வெளியில் சாதனைப் படைத்த கல்பனா சாவ்லா கனவு காணுங்கள் என்று இந்தியாவை வல்லரசு நாடாக்கி அழகு பார்க்க நினைத்த அப்துல்கலாம் ஐயா அவர்கள் இப்படிப் பலர் தங்கள் வாழ்க்கைப் பாதையை சாதனைப் பாதையாக மாற்றியுள்ளனர். சோதனைகள் மிகுந்து வரும் நிலையிலும் கூட அவர்களின் சாதனை வேட்கை ஒருபோதும் சோர்ந்து போனதில்லை.
சாதிப்போம்
யாருக்குத்தான் சோதனை இல்லை..யாருக்குத்தான் சோகம் இல்லை.. எல்லோருக்கும் ஏதாவது ஒரு சவால் வந்து கொண்டுதான் இருக்கும். அதை சந்திக்கப் பயப்படுவோர்தான் சாதிக்கத் தவறுவார்கள். மாறாக துணிச்சலுடன் எதிர்கொள்ளும் எல்லோருக்கும் கிடைப்பது அருமையான வெற்றிதான். வியர்வையின் துளிகள் மண்ணில் வீழ்ந்தாலும் அது விருட்சமாக மாறி நம்மை அடையாளம் காட்டும்போது கிடைக்கும் பெருமையே தனிதானே.
சாதனையாளராக மாறுங்கள்
நாமும் நாம் வாழும் காலத்தில் நம் வேலை செய்யும் தொழிலில் வித்தியாசமாக ஏதாவது செய்து சாதிக்க வேண்டும். அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து சாதனையாளராக மாறுங்கள். உங்களுக்குப் பிடித்த துறையில் வல்லுநராகுங்கள். முயற்சி இருந்தால் எதுவும் சாத்தியமே. உங்கள் வாழ்க்கையும் எதிர்கால வரலாறுகளாக மாறட்டும்.