ஆள் முக்கியமில்லை.. செய்யும் காரியம்தான் பெஸ்ட்டா இருக்கணும்...!
சென்னை: நாம் ஒரு செயலை செய்ய பெரிய ஆளாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. மாறாக நாம் செய்யும் காரியம்தான் பிரமாதமாக இருக்க வேண்டும், பேசப்பட வேண்டும். அதற்கு முக்கியத் தேவை ஆளுமைதான்.
அந்த ஆளுமையைத்தான் நாம் கைவரப் பெற்றிருக்க வேண்டும். அந்த அளவுக்கு நமது தகுதி, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதையும் பிரமாண்டமாக செய்ய வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள்.
அது தேவையில்லை. மாறாக நாம் செய்யும் காரியம் பிரமாண்டமான அளவில் பேசப்படவேண்டும். நாலு பேருக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
தேவையில்லை பிரமாண்டம்
ஒரு செயலைச் செய்கிறோம் என்றால் அதற்குப் பிரம்மாண்டம் தேவையில்லை அதை சிம்பிளாக நேர்த்தியாக இருந்தால் போதும். ஒரு கம்பெனியைச் சரியாக நிர்வகிக்க சிறந்த ஆளுமைத் தேவை. அதற்கு எம்.பி.ஏ படித்த பட்டதாரிக்கு இருக்கும் ஆளுமையை விட படிப்பறிவில்லாதவர்களே திறம்பட அந்தக் கம்பெனியை நிர்வகிக்க இயலும். சிறு வயதிலிருந்தே நாம் ஆளுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
திறம்பட செய்ய வேண்டும்
எந்த ஒரு செயலை ஆசிரியர் செய்யச் சொன்னாலும் நான் செய்கிறேன் என்று முன்வந்து அச்செயலைத் திறம்பட செய்ய வேண்டும். நம்மிடம் ஒரு சின்ன வேலைக் கொடுத்தாலும் அதைத் திறம்பட செய்ய வேண்டும். ஆளுமையில் பெண்களுக்கூ நிகர் எவரும் இல்லை எனலாம். எப்படி என்கிறீர்களா. அட ஆமாங்க நம் வீட்டின் மொத்தக் குடும்பப் பொறுப்பையும் பார்ப்பது நம் வீட்டின் இல்லத்தரசிகள் தானே.
பெண்கள்தான் பெஸ்ட்
வீட்டு வேலைகளையும் திட்டமிட்டுச் செய்து பிள்ளைகளையும் பேணிப் பாதுகாத்து வெளியே அலுவலகத்திலும் வேலையை நேர்த்தியாகச் செய்து வரும் பெண்கள் ஆளுமையின் அடையாளங்கள். ஆளுமை என்பது பிறக்கும் போதே யாருக்கும் இருப்பதில்லை. வளர வளர நம் ஆளுமைத்திறனை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறந்த ஆளுமை இல்லாத கம்பெனி தோல்விகளைச் சந்திக்கும். ஒரு சிறந்த ஆளுமை இல்லாத நாடு பல இன்னல்களைச் சந்திக்கும்.
ஆளுமை முக்கியம்
நம் நாட்டின் சிறந்த ஆளுமைக்கான எடுத்துக்காட்டு கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களும் மற்றும் அம்மா என்று எல்லோராலும் அழைக்கப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்கள். தன் ஆளுமையால் தமிழ்நாட்டைத் திறம்பட வழிநடத்திச் சாதனை செய்தவர்கள். மதிய உணவுத் திட்டம் மூலம் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் காமராஜர் ஐயா அவர்கள். பிறகு எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலம் மக்களால் மறக்க முடியாத ஒன்று. தன் ஆளுமையால் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்தவர்.
ஆணாதிக்கத்தை தகர்த்து
ஒரு கட்சியை பெரியளவில் வளர்த்து கட்சியின் அத்தனைப் பேரையும் சமாளித்து ஆணாதிக்கம் நிறைந்த உலகில் இரும்பு மனுஷியாக உருவெடுத்தவர். அம்மா என்றாலே பாசம் தான். பெண்களுக்கென இலவச திட்டங்களைப் பல கொண்டு வந்ததன் பெருமை செல்வி. ஜெயலலிதா அவர்களையேச் சாரும். ஜெ.ஜெயலலிதா என்னும் நான் என்ற கம்பீரக் குரல் தமிழகமெங்கும் ஒலித்தது. தோல்வியைக் கண்டு துவளாமல் சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றிய பெருமை அம்மாவையேச் சாரும்.
தலைமைப் பண்பு முக்கியம்
ஆளுமையை நாம் சிறு வயதிலேயே வளர்த்துக் கொள்ள வேண்டும். தலைமைப் பண்பு இருக்கிறதா என்று இன்றுப் பல்வேறு நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கும் போது சோதிக்கின்றனர். ஆளுமை என்பது உடனே வந்துவிடாது. சிறு வயதிலேயே நாம் நம் ஆளுமைத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். சிறந்த ஆளுமையோடு இருந்து வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் வெற்றியை வசமாக்குவோம்