இடுப்பிலும் தோளிலும் 2 குழந்தைகள்.. 500 கி.மீ. தூரம் நடைபயணம்.. எதிர்நீச்சல் போடும் பெண் தொழிலாளி
மும்பை: இரு குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஒரு பெண்ணும், தனது வயிற்றில் 7 மாத குழந்தையை சுமந்து கொண்டு மற்றொரு பெண்ணும் நவி மும்பையிலிருந்து சொந்த கிராமமான புல்தானாவுக்கு 500 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சம்பவம், எத்தனை இடர்கள் வந்தாலும் அதை எதிர்த்து எதிர்நீச்சல் போடுவோம் என்பதையே காட்டுகிறது.
Recommended Video
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அந்த ரயில்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க மிகவும் குறைவானவர்களே அனுப்பப்படுகிறார்கள். அதற்கு கூட்டம் முண்டியடிக்கிறது. ரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் நடந்தே ஊர் போய் சேர்ந்துவிடலாம் என எண்ணி மக்கள் நடைப்பயணத்தை தொடங்கியுள்ளனர்.
கையில் குழந்தை.. மறுகையில் சூட்கேஸ்.. முகமெல்லாம் விரக்தி.. தளர்வில்லாத நடை.. மனசை உலுக்கும் போட்டோ
மூட்டை முடிச்சு
நவி மும்பையில் கான்சோலியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 20 பேர் குழந்தை, குட்டி, மூட்டை முடிச்சுகளுடன் புல்தானா கிராமத்திற்கு நடந்தே செல்லும் பயணத்தை நேற்று முன் மாலை 7 மணிக்கு தொடங்கினர். இந்த குழுவில் 7 மாத கர்ப்பிணி ஒருவர் நடக்க முடியாமல் நடந்தே சென்றார். அது போல் இரு குழந்தைகளை தூக்கிக் கொண்டு பெண் ஒருவரும் நடந்து சென்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 மணி நேரம்
இதுகுறித்து 7 மாத கர்ப்பிணியான நிகிதாவிடம் கேட்ட போது, நான் நேற்று இரவு 7 மணிக்கு நடக்க தொடங்கினேன் சுமார் 12 மணி நேரமாக சாலையில் நடந்து கொண்டுதான் இருக்கிறேன்.உணவு, குடிநீர் இல்லை. இங்கு தங்கி நாங்கள் என்ன செய்வது? என்றார். மகாராஷ்டிராவின் பல்வேறு நகரங்களை கடந்து சாலைகளிலும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் குறைந்த அளவிலான உணவு, தண்ணீர் ஆகியவற்றை கொண்டு பயணிக்கிறார்கள்.
தோளில் ஒன்று
இடுப்பில் ஒரு குழந்தை, தோளில் ஒரு குழந்தையை சுமந்து செல்லும் பெண்ணும் உணவு, தண்ணீர் உள்ளிட்டவை இல்லாமல் சிறு குழந்தைகளை வைத்து கொண்டு என்ன செய்வது, அதனால்தான் ஊருக்கு செல்கிறோம் என்றார். அந்த குழுவில் வந்தவரிடம் சிறப்பு ரயில்கள் குறித்து கேட்டதற்கு, அவர் கூறுகையில் நீண்ட நாட்களாக இதைத்தான் சொல்கிறார்கள். நாங்களும் கேட்டுக் கொண்டுதான் வருகிறோம்.
நம்பிக்கை இருக்கிறது
ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. 14 ஆம் தேதிக்கு பிறகுதான் அவர்கள் எங்களை ஊர்களுக்கு அனுப்புவார்கள் போல் தெரிகிறது என்றார். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதாகவும் அதன் சோதனை முடிவுகள் இன்னும் தரவில்லை என்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூறுகிறார்கள். என்னதான் இவர்கள் உணவு, குடிநீர், வேலை, பணம் இல்லாமல் துயரத்துடன் சென்றாலும், எத்தனை இடர்கள் வந்தாலும் அதை தாங்கும் வலிமை தங்களுக்கு இருக்கிறது என்பதை உணர்த்துவது போல் இருக்கிறது.