Mullaperiyar Dam Water Level Today | முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் இன்று
முல்லைப் பெரியாறு அணை வரலாறு
முல்லைப் பெரியாறு அணைக்கான கட்டுமானப் பணி 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் ஆங்கிலேய இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. முல்லைப்பெரியாறு அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை எங்கு உள்ளது?
முல்லைப் பெரியாறு அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது. அணை கட்டப்பட்ட இடம் கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அணை தமிழகத்திற்கு சொந்தமானது. தமிழக பொதுப்பணித்துறை இந்த அணையைப் பராமரித்து வருகிறது.
எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது முல்லைப் பெரியாறு அணை?
முல்லைப் பெரியாறு அணை கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி கேரளாவில் பாய்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் வன சரணாலயம் தேக்கடி உள்ளது.
முல்லைப் பெரியாறு முழு கொள்ளளவு விவரம்
முல்லைப்பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவு 152 அடியாகும். ஆனால் முழுக்கொள்ளளவும் நீர் தேக்கினால் ஆபத்து என்று கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. இதுதொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. அணையின் மொத்த நீர் கொள்ளளவு 15.5 டி.எம்.சி ஆகும். அணையின் மொத்த உயரம் 155 அடி ஆகும்.
முல்லைப் பெரியாறு வானிலை
முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப் பகுதியில் தேக்கடி வன சரணாலயம் உள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதால் எப்போதும் குளிர்ச்சியான காற்றும் இதமான சூழலும் நிலவி வருகிறது.
முல்லைப் பெரியாறு - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்
தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை அருவி, கும்பக்கரை அருவி, சுருளி அருவி, மங்களதேவி ஸ்ரீகண்ணகி கோவில், வைகை அணை, பென்னிகுவிக் மணிமண்டபம் ஆகியவை சிறந்த சுற்றுலாத்தலங்கள் ஆகும். கேரளாவில் அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, தேக்கடி, இரவிகுளம் தேசியப் பூங்கா, இராமக்கல் மெட்டு பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இங்குள்ளன. தேக்கடியை ஒட்டி குமுளி பகுதியும் காண தகுந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு மலையில் இருந்து பெறப்படும் வாசனை பொருட்கள் அதிகளவு கிடைக்கும் என கூறப்படுகிறது.
முல்லைப் பெரியாறு - பார்வையிடும் நேரம்
முல்லைப் பெரியாறு அணையை அனைத்து நாட்களிலும் காலை 6 அணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடலாம். ஆனால் காலை 7 மணி முதல் மாலை 3 வரை அணைப்பகுதியை பார்வையிடுவதுதான் சிறந்தது என கூறப்படுகிறது. இங்கு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டினருக்கு 300 ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.