வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நான் போகிறேன்நீ இரு
இரண்டு இலையுதிர் காலங்கள்?
-BUSON
காலங்களைக் கூட தரம் பிரிக்கிறோம்-பிரிப்பது நமது வசதியை வைத்துத்தான்-இலையுதிர்காலமென்பது நமக்கு சோகமானது-
அதனால் மரத்துக்கும் சோகமாகத் தானிருக்க வேண்டுமென நினைக்கிறோம் -
இலையுதிர் காலத்தில் நமக்குகாய் கிடைக்காது-
கனி கிடைக்காது-
இலைகளில்லாத காரணத்தால்-
நிழல் கிடைக்காது
மலர்களில்லாத காரணத்தால்
மணம் கிடைக்காது
எதுவுமில்லாத காரணத்தால்
பாடும் பறவைகளிருக்காது-
இசைக்கும் வண்டுகள் வராது-
எனவே எதுவுமே கிடைக்காததால்இலையுதிர் என்பது வருத்தத்தின் வரவு-
சோகத்தின் சொரூபம்-
வருத்தத்தைக் காட்சிப்படுத்த எண்ணுகிறபோதெல்லாம்இலையுதிர் காலம்
நமக்குக் குறியீடு ஆனது.
மரத்தின் உடலில் காதுகளை வைத்துஅவை தங்கள் அமைதியினூடே
என்ன பேசிக்கொண்டிருக்கின்றன
என்பதை நாம் பரிசோதித்திருக்கிறோமா?
இலையுதிர் காலம் என்பது மெளனம்-இலையுதிர் என்பது விரதம்-
இலையுதிர் என்பது கர்ப்பம்-
இலையுதிர் என்பது தியானம்-
இலையுதிர் என்பது தவம்-
ஒவ்வொரு மரமும் இலையுதிரை எதிர்பார்த்துகாத்திருக்கிறது - நேசிப்புடன்,
எல்லா பாரங்களையும் உதிர்த்து வெறுமையாவதற்கு-எல்லா சருகுகளையும் உதிர்த்து கனமிழப்பதற்கு-
கொஞ்ச காலமேனும்
அவற்றின் தனிமையில் யாரும் கல்லெறியாமலிருக்கும்
அந்த இனிமையான சுகானுபாவத்துக்கு-
மேலே அமர்ந்து எச்சமிடும் பறவைகளினால்உடல் நனையும் உபாதையிலிருந்தும்-
நிழலில் அமர்ந்து சகலநேரமும்
வீண்கதை பேசுபவர்கள் இறக்கி வைக்கும்
சோகங்களை சுமக்காமலிருப்பதும்-
கனிகளுக்காகக் கல்லடிபடுவதிலிருந்தும்
சிறிது நாட்களேனும்
தனக்காக மட்டுமே வாழும்
உன்னதம் இலையுதிர் காலத்தில் மட்டுமே கிடைக்கிறது.
மரம் மரத்தன்மையை இழந்துமரத்துப் போக விரும்புமா?
இலையுதிர் பட்டுப் போகிற அடையாளமில்லை-அது ஊமையற்ற மெளனம்-
எண்ணமற்ற அமைதி
பசியற்ற விரதம்;
ஆசையற்ற பக்குவம்-
இலையுதிர் காலத்தில் மரம் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது-எத்தனை நாள் பழைய இலைகள்-
புதிய துளிர்களும்
புதிய மொட்டுக்களும்
புதிய மகரந்தமும்
உயிர்த்தெழுவதற்கு
இலையுதிர் என்னும் இந்த வைராக்கியம் தேவை
மரத்துக்கும் புதிய ஆடை உடுத்தும்எண்ணம் தோன்றாதா?
இலையுதிர் என்னும் கர்ப்பத்தில்மரம் தன்னையே பிரசவிக்கிறது.
கவிதையும்கவிஞனும் ஒரே நேரத்தில் பிரசவம் ஆவதுபோல்-
தாயும், சேயும்ஒரே நேரத்தில் பிறப்பதுபோல்
வசந்தம் வரும்போது மட்டுமே தன்னுடையவாசலுக்கு வந்த மனிதர்களில்
எத்தனை பேர்
இலையுதிரில் தன்னை நாடு வருகிறார்கள்
என்று மரம் கணக்குப் போட்டுப் பார்க்கிறது-
அப்போது உண்மையான மனிதர்களை
அதன் ஆத்மா அடையாளம் காணுகிறது.
மரத்துக்கு மட்டுமல்ல-மனிதனுக்கும் இலையுதிர் உண்டு-
துறவு இலையுதிர்-ஆசைகளை உதிர்ப்பதால்-
உறவுகளை உதிர்ப்பதால்-
எண்ணங்களை உதிர்ப்பதால்-
கனவுகளை உதிர்ப்பதால்-
"உதிர்க்கிறோம் என்ற உணர்வையும், பெருமிதத்தையும்உதிர்க்கும்போது துறவு முற்றுப் பெறுகிறது.
துறவு இனிப்பதற்குக் காரணம்அது பாரமற்று இருப்பதால்-
கனமிழந்து இருப்பதால்.
இலையுதிர் காலத்து மனிதனும்-துறவு பூண்ட மரமும்
ஒரே தன்மையுடன்-
அவனுக்கும் சில ஆர்வங்கள்-தனக்குள் புதிய துளிர்கள்-
புதிய வெளிச்சம்
புதிய ஞானம்
துளிர்க்கவேண்டும் என்று.
தன்னை முற்றிலுமாக அழித்துக்கொண்டு
யாருமற்றதாக ஆகிவிட வேண்டுமென்று.
இலையுதிர் காலத்து மரத்துக்கு அடையாளமேதுமில்லைமலரில்லை, காயில்லை, கனியில்லையெனில்
மரத்துக்கு எதற்குப் பெயர்?
துறவிக்கும் பெயரில்லை-
"நான் போகிறேன்-நான் போகும்போதுதான்-
துறவு ஆரம்பமாகிறது-
நான் போவதற்கு அனைத்தும்உதிர்ந்தாகவேண்டும்-
BUSON சொல்கிறார்-
"நானும் ஓர் இலையுதிர் காலம்-நீயும் ஓர் இலையுதிர் காலம்-
ஒரே இடத்தில் இரண்டு இலையுதிர் காலங்களெதற்கு?
அதனால் நான் போகிறேன்""-
சரி-ஏன் போகவேண்டும்-""உன்னோடு நான் இருந்தால்
நான் உதிர்த்தவற்றை நீ
நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பாய்-
அதனால் உதிர்ந்த "நான்
என்னோடு ஒட்டிக்கொண்டாலும்
ஒட்டிக் கொள்ளும்-
நரமே! நீ உதிர்த்தவை ஒருபோதும் ஒட்டிக்கொள்ளாது.நான் உதிர்த்தவை
ஒட்டிக் கொள்ளாதவையாகவே நீடிக்க
நான் போகிறேன் - என்
"நான் முற்றிலுமாகப் போகும்வரை
எனக்குள் ஞானம் புதிதாகப் பூக்கும் வரை-
ஆம்!"உதிர்ந்துவிட்டோம் என்கிற எண்ணத்தையும்
உதிர்ப்பதே சிறந்த இலையுதிர்!
(தூறல் வரும்)