தமிழகத்தில் இன்று
ரகுபதி, கருப்பசாமி பாண்டியன் திமுகவில் இணைகின்றனர்
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரகுபதி, கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைகின்றனர்.
சென்னையில் புதன்கிழமை மாலை முதல்வர் கருணாநிதி தலைமையில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இவர்களும் புதுக்கோட்டை, திருநிெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த இவர்களது ஆதரவு அதிமுகவினரும் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில்சேர்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ரகுபதி புதுக்கோட்டை மாவட்டத்திலும், கருப்பசாமிபாண்டியன் திருநெல்வேலி மாவட்டத்திலும்முகாமிட்டுள்ளனர்.
அதிமுகவில் அமைப்புச் செயலாளராகவும், ஆட்சியின்போது வீட்டு வசதித் துறை அமைச்சராகவும் இருந்தவர் ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம்திருமயம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரை கட்சிப் பொறுப்பில் இருந்து முதலில் நீக்கிய ஜெயலலிதா,பின்னர் கட்சியை விட்டே நீக்கி விட்டார்.
அதேபோல் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவியில் இருந்தவர் கருப்பசாமி பாண்டியன். ஜெயலலிதாவின் ஆரம்ப கால விசுவாசி. நெல்லைமாவட்டத்தில் எம்ஜிஆர் காலத்தில் மாவட்டச் செயலாளராக இருந்தவர். சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை செயல்பட்டவர்.
தென் மாவட்ட அதிமுகவின் முக்கிய தலைவராக விளங்கி வருபவர். இவரையும் முதலில் பொறுப்பில் இருந்து தூக்கிய ஜெயலலிதா, பின்னர் கட்சியைவிட்டே நீக்கி விட்டார். இவரை கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கியது இது இரண்டாவது முறை.
ஏற்கனவே 1988ம் ஆண்டு இவரை கட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கினார். அப்போது திருநாவுக்கரசு தலைமையில் இவர், முன்னாள் அமைச்சர்சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு, திக ஆதரவுடன் 1989ம் ஆண்டு தேர்தலை சந்தித்தனர்.
அந்த தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார் கருப்பசாமி பாண்டியன்.
முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவுடன் சேர்த்து இவர்கள் இருவரையும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டார்கள் என்று காரணம் கூறிகட்சியை விட்டு ஜெயலலிதா நீக்கினார். பின்னர் மூவரும் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்படப் போவதாகவும், கட்சியை கைபற்றப்போவதாகவும் பரபரப்பு அறிக்கை வெளியிட்டனர். அப்படி அறிவித்தபடி சேடபட்டி முத்தையா மட்டும் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில்வழக்குத் தொடர்ந்துள்ளார்.ஆனால், ரகுபதியும், கருப்பசாமி பாண்டியனும் திமுகவில் சேர தீர்மானித்து விட்டனர்.
இவர்கள் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் 3ம் தேதி புதன் கிழமை அன்று அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில்இணைகின்றனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தங்களது ஆதரவாளர்களுடன் 60 பஸ்களில் செவ்வாய் கிழமை சென்னை வருகின்றனர்.
இவர்கள் இருவரும் திமுகவில் சேர்ந்த பின்னர் சேடபட்டி முத்தையா எத்தகைய அரசியல் நிலையை மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆரம்பகாலம் முதல் கருணாநிதி எதிர்ப்பாளராக விளங்கிய சேடபட்டி முத்தையா திமுகவில் இணைவதில் சிக்கல்கள் உள்ளன. அவர் மீதான ஊழல் வழக்கில்அவர் உள்பட குடும்பமே தண்டனை பெற்றுள்ளது.
தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு 25 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சேடபட்டியை கட்சியில் சேர்த்துக் கொள்ள திமுக வட்டாரம்தயங்குவதாக தெரிகிறது. எனினும், அவரும் விரைவில் திமுகவில் சேர்ந்து விடுவார் என்று ரகுபதி, கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் தெரிவித்தனர்.
ஏற்கனவே ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டு திமுகவில் அடைக்கலம் புகுந்த சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் தென்னவன்,செல்வேந்திரன் போன்றோர் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.