மேட்ச் பிக்சிங்: பிந்த்ராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் கபில்தேவ்
டெல்லி:
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தன் மீது குற்றம் சாட்டிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பிந்த்ராவுக்குமுன்னாள் கேப்டன் கபில் தேவ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
1994ம் ஆண்டில் இலங்கையில் நடந்த சிங்கர் கோப்பை போட்டியின்போது மனோஜ் பிரபாகருக்கு கபில்தேவ் 25 லட்சம்கொடுத்தாகவும் சரியாக விளையாட வேண்டாம் என்று கூறி இந்தப் பணத்தை கபில் கொடுத்ததாகவும் பிந்த்ரா குற்றம்சாட்டியிருந்தார். இந்தத் தகவலை பிரபாகரே தன்னிடம் கூறியதாகவும் பிந்த்ரா சி.என்.என். தொலைக்காட்சிக்கு கொடுத்தபேட்டியில் தெரிவித்தார்.
கடந்த 25 ஆண்டுகளாக பாடுபட்டு சேர்த்த நற்பெயருக்கு பிந்த்ரா களங்கம் கற்பித்துவிட்டதாக கபில் தேவ் தனது நோட்டீசில்கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை அவர் இந்த நோட்டீசை அனுப்பினார். இது குறித்து கபில்தேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
நான் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். எனது பெயரை பணம் கெடுக்கும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை.மன, பணரீதியில் நான் அடைந்துள்ள துயரத்துக்கு அளவே கிடையாது.
பிந்த்ராவின் பேச்சு எனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என்பதுகுறித்து எனது வழக்கறிஞர்கள் தான் முடிவெடுப்பர். முதல்கட்டமாக பிந்த்ராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.இப்போது பிந்த்ரா தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
நான் பிந்த்ராவுக்கு பதில் சொல்வதா அல்லது மனோஜ் பிரபாகரின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்வதா எனத் தெரியாமல் குழம்பிப்போய் இருக்கிறேன். பிரபாகர் உண்மையிலேயே பிந்த்ராவிடம் இவ்வாறு கூறினாரா என்றும் தெரியவில்லை.
இவ்வாறு கபில் தேவ் கூறியுள்ளார்,
அதே நேரத்தில் பிரபாகரை எந்த நிருபராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் ஊரில் இல்லை என அவரது வீட்டில்தெரிவிக்கப்பட்டது.