தமிழகத்தில் இன்று
ஐதராபாத்:
முன்னாள் பிரதமர்களின் 3-வது அணி அமைக்கும் முயற்சி வெற்றி பெறாது என்று பாரதீய ஜனதா கூறி இருக்கிறது.
3-வது அணியைப் பிறப்பிக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திரசேகர், தேவேகவுடா ஆதியோர் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேற்கு வங்காள முதல்-மந்திரி ஜோதிபாசுவை சந்தித்து 2 நாட்களுக்கு முன்பு இது பற்றி அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். மீண்டும் டெல்லியில்சந்தித்து மேலும் பேச இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதற்கிடையே முன்னாள் பிரதமர்களின் இந்த முயற்சி வெற்றி பெறாது என்று பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான வெங்கையாநாயுடு கூறி இருக்கிறார்.
இது பற்றி ஐதராபாத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
3-வது அணி அமைக்கும் முயற்சி ஏற்கனவே தோல்வி அடைந்த நிலையில் மேலும் அதைப் புதுப்பிக்க நினைப்பது மக்களை ஏமாற்றும் இன்னொருமுயற்சி ஆகும். இன்றைய அரசியலில் 2 அணிகள்தான் உள்ளன. தேசியவாத சக்திகள் பாரதீய ஜனதாவின் பின்னால் அணி வகுத்து நிற்கின்றன.
ஊழல் வாதிகள், கிரிமினல்கள், சாதியை வைத்து அரசியல் நடத்துபவர்கள் அனைவரும் காங்கிரஸ் பின்னால் நிற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஏ.என்.எஸ்.