தமிழகத்தில் இன்று
திருச்சி:
இலங்கையில் யுத்த களத்தில் புலிகளுக்கே வெற்றி கிடைக்கும் என்று மதிமுக தலைவர் வைகோ கூறினார்.
திருச்சியில் மதிமுக வுக்குச் சொந்தமான புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
இலங்கையில் யாழ்பாணத்தில் 40 ஆயிரம் சிங்கள சிப்பாய்களை விடுதலைப்புலிகள் சுற்றி வளைத்துள்ளனர். சொந்த மண்ணில் அவர்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மிகவும் கவலை அளிக்கிறது.
உணவுக்காகவும், உடைக்காகவும், மருந்துகளுக்காகவும் அப்பாவித் தமிழர்கள் அல்லல்படுவது மிகவும் கொடுமையான விஷயம்.
அவர்களது போராட்டம் நியாயமானதே. யானையிறவு பகுதியை அவர்கள் மீட்டு விட்டார்கள். யாழ்பாணத்தையும் அவர்கள் வெகு விரைவில்மீட்பார்கள் என்று நம்பலாம்.
விடுதலைப்புலிகளிடம் சிக்கித் தவிக்கும் ராணுவ வீரர்களை மீட்க இந்தியா ராணுவ உதவி எதுவும் அளிக்காது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.இது மத்திய அரசுக்கு தமிழ்நாடு மீதான பற்றையே பிரதிபலிக்கிறது.
சந்திரிகாவைக் குறித்து நான் தவறாகப் பேசியதாக இலங்கை அமைச்சர் கதிர்காமர் கூறியுள்ளார். அவர் அதை நிருபிக்கட்டும். நான் என்எம்.பி.பதவியையே ராஜினாமா செய்கிறேன். அப்படி அவர் நிரூபிக்காவிட்டால் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு அவர் தயாரா?
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நான் எப்போதும் குரல் கொடுப்பவன். யுத்த களத்தில் விடுதலைப்புலிகளே வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு வைகோ கூறினார்.