தமிழகத்தில் இன்று
கலர் டிவி ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சென்னை:
உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக சென்னை தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான கலர் "டிவி ஊழல் வழக்கில் வக்கீல்கள்இறுதி கட்ட வாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஊராட்சிகளுக்கு கலர் "டிவி வழங்கும் திட்டத்திற்காக கலர் "டிவி வாங்கியதில் ரூ.10 கோடியே 16 லட்சரூபாய் ஊழல் நடந்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்டவர்கள் மீதுவழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை இரண்டாவது தனி நீதிமன்றத்தில் நீதிபதி ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.இவ்விசாரணையில் அரசு தரப்பு சாட்சிகள், எதிர் தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்து, இறுதி கட்ட வக்கீல்கள் வாதம்நடைபெறும் தருவாயில் உள்ளது.
இறுதிக் கட்ட வக்கீல்கள் வாதம் முடிவடைந்ததும் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்படும்.
இதையடுத்து இவ்வழக்கில் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என்ற நிலையில் அரசு சாட்சிகள் 12 பேரை மீண்டும் விசாரிக்கவேண்டும் என்று ஜெயலலிதா தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை தனி நீதிபதி ராதாகிருஷ்ணன் தள்ளுபடி செய்தார்.
அதையடுத்து உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா அப்பீல் செய்தார். அங்கும் தனி நீதிபதி எடுத்த முடிவு சரியென்று தீர்ப்புகூறப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் தனி நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட வக்கீல்கள் வாதம் துவங்கி நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமையுடன் வாதம் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா மனு மீதான தீர்ப்பு கூறப்படும் வரையில் தனி நீதிமன்றத்தில் வக்கீல்கள் வாதத்தை நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை இரண்டாவது தனி நீதிமன்றத்தில் வெள்ளியன்று நடைபெறவேண்டிய இறுதிவாதம் தள்ளிவைக்கப்பட்டது.