தமிழகத்தில் இன்று
வர்த்தக உறவை மேம்படுத்த இந்தியா, சீனா உறுதி
பீஜிங்:
தேக்கமடைந்த நிலையில் இருக்கும் இரு தரப்பு வர்த்தக உறவை வலுப்படுத்த இந்தியாவும், சீனாவும் முடிவு செய்துள்ளன.
சீனா வந்துள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனிடம் இதை சீன பிரதமர் ஸூ ரோங்ஜி வலியுறுத்தினார். பொருளாதாரத் துறையில் இருநாடுகளின் உறவும் பலப்படுத்தப்பட வேண்டும். மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு சீனா எப்போதும் தயாராக உள்ளது என்றார் அவர்.
வியாழக்கிழமை நடந்த இந்த சந்திப்பு, ஒரு மணி நேரம் நீடித்தது. பொருளாதாரத் துறையில் இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து இருநாட்டு பொருளாதார நிபுணர்களும் முடிவெடுக்கலாம் என்றார் ஸூ ரோங்ஜி.
மூன்று நாள் பீஜிங் பயணத்தை வியாழக்கிழமை கே.ஆர்.நாராயணன் முடித்துக் கொண்டு தொழில் நகரமான தலியாக்குக் கிளம்பினார். தனது மூன்று நாள்பயணத்தின்போது, சீன அதிபர், பிரதமர் மற்றும் பல்துறை அதிகாரிகளுடன் நாராயணன் பேசினார்.
நாராயணனின் பீஜிங் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்று குடியரசுத் தலைவருடன் பயணம் செய்யும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். அணு ஆயுதத்திட்டம், காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளை இரு நாட்டுத் தலைவர்களும் தவிர்த்தனர்.
இந்தியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கிடைக்க சீனப் பிரதமரும் தனது ஆதரவைத் தெரிவித்தார்.
யு.என்.ஐ.