பாகிஸ்தானிடம் பங்களாதேஷ் சரண் - அப்துர் ரஸாக் அபார பந்து வீச்சு
டாக்கா:
பங்களாதேஷுக்கு எதிரான ஆசிய கோப்பைக் கிரிக்கெட் ஆட்டத்தில் 233 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அந்தஅணியின் வேகப் பந்து வீச்சாளர் அப்துர் ரஸாக் சிறப்பாகப் பந்து வீசி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிக்கு வழி வகுத்தார்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது. இம்ரான்நசீர் 80 ரன்களும், யூசுப் யுகானா 80 ரன்களும், இன்சமாம் 75 ரன்களும், அபிரிதி 45 ரன்களும், அன்வர் 31 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய பங்களாதேஷ், பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் திரும்பினர். பஷீர் 23 ரன்களும்,ரெஹ்மான் 11 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில்தான் ரன்கள் எடுத்தனர். உபரியாக 22 ரன்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் பாகிஸ்தானுக்கு எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் 34.2 ஓவரில் 87 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பங்களாதேஷ்தோல்வியடைந்தது. இதன் மூலம் 233 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பாகிஸ்தான் பெற்றது.
பாகிஸ்தான் அணியில் அப்துர் ரஸாக் தனது பந்துவீச்சால், 4 ஓவர்களில் 5 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அசார் மெஹ்மூத் 2விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இப் போட்டியில் வென்றால்தான் இறுதிப் போட்டிக்குள் நுழையமுடியும் என்ற நிலையில், இந்தியா இந்த ஆட்டத்தில் விளையாடுகிறது.
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வென்றதன் மூலம் இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றுவிட்டது.