தமிழகத்தில் இன்று
கலர் டி.வி. ஊழல் வழக்கு: தீர்ப்பை எதிர்த்து செல்வகணபதி அப்பீல்
சென்னை:
கலர் டிவி ஊழல் வழக்கில் ஐந்தாண்டு சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில்அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சியின் போது கிராம பஞ்சாயத்துகளுக்கு கலர் டிவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்காக கலர் டி.விக்கள்வாங்கப்பட்டதில் 10 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக திமுக ஆட்சியில் வழக்குத் தொடரப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள்எச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி, ஹரிபாஸ்கர் உள்ளிட்ட 10 பேர் மீதான இவ்வழக்கை தனி நீதிமன்றம் விசாரித்தது.
ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகிய மூவரையும் தனி நீதிமன்றம் விடுதலை செய்தது.
செல்வகணபதி மற்றும் அதிகாரிகள் 7 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த 7 பேரும் வேலூர் சிறையில்அடைக்கப்பட்டனர்.
இப்போது தனி நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 7 பேரும் அப்பீல் செய்துள்ளனர். அதில், எங்கள் தரப்பு சாட்சிகளை தனிநீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை.எனவே தனி நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.
அப்பீல் வழக்கு முடியும் வரை எங்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர்.