தமிழகத்தில் இன்று
மைக்-க வி-டுங்-கப்-பா!...அரைகுறை பேச்சாளர்களுக்கு ஜெ. அன்புக்கட்டளை
சென்னை:
மைக்கைப் பிடித்தால் விட மறுக்கும் அரைகுறைப் பேச்சாளர்களுக்கு ஜெயலலிதா அன்புக்கட்டளை விடுத்துள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் வியாழக்கிழமை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுவதும் அதிமுக பொதுக்கூட்டங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி. வேறு எந்த அரசியல் இயக்கத்துக்கும் இல்லாதஅளவில் பொதுமக்கள் அதிமுக பொதுக்கூட்டங்களில் பெருமளவு பங்கேற்கின்றனர் என்பதிலும் மகிழ்ச்சி.
சிறந்த முன்னணி சொற்பொழிவாளர்களின் பேச்சைக் கேட்பதற்குப் பேரார்வத்தோடு பொதுமக்கள் வந்து அமர்ந்து காத்திருக்கும் நிலையில், சிறப்புப்பேச்சாளரும் நெடுநேரம் மேடையில் இருக்கும்போது உள்ளூர்ப் பேச்சாளர்களும் நிர்வாகிகளும் நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்வதால் பொதுமக்கள்களைப்படைந்து விடுகின்றனர்.
சிறப்புப் பேச்சாளர்களுக்கு மைக் கொடுக்கும்போது இரவு 11, 12 மணி ஆகி விடுவதால் கூட்டம் நடத்துவதன் நோக்கம் முழுமை அடையாமல் போய்விடுகிறது.
சிறப்பு பேச்சாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் மிகுந்த கால தாமத்திற்குப்பிறகு பேசத் தொடங்குவதால் பொதுமக்களிடம் பேச்சைக் கேட்பதற்குஆர்வம் குறைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி விடுகிறது.
எனவே பொதுக்கூட்டம் நடத்துவதன் மூலம் முழுமையான பயன் கட்சிக்கு கிடைக்காமல் போய் விடுகிறது. இந்நிலையை மாற்றி அமைக்க உள்ளூர்ப்பேச்சாளர்களும், நிர்வாகிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
சிறந்த முன்னணிப் பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றும் கூட்டங்களில் இரவு 9 மணிக்கே அவர்களிடம் மைக் வழங்க வேண்டும் என்பதே என் அன்புக்கட்டளை.
இதைக் கட்சியினர் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.