டி.வி. ஒளிபரப்பு உரிமை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கல்கத்தா:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை டி.வி.யில் ஒளிபரப்புவதற்கான உரிமை வழங்கும் டென்டர்கள் குறித்து ஏழுநாட்கள் கழித்து முடிவு செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜீ டீவி பங்குதாரர் ஜதீன் தல்வார் தொடர்ந்திருந்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி வாசுதேவ் பானிக்கிரஹி இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்தார்.
ஜதீன் தல்வார் தனது மனுவில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டிகளை டி.வியில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை வழங்குவதுதொடர்பாக 1999-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜக்மோகன் டால்மியா டென்டர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதையடுத்து ஜீ டி.வி, டிரான்ஸ்வேர்ல்ட் இன்டர்நேஷனல், வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப் ஆகிய நிறுவனங்கள் ஒளிபரப்பு உரிமை கோரி விண்ணப்பித்தன. இதில் ஜீ டிவிநிறுவனம் 600 மில்லியன் டாலருக்கு உரிமை கோரியிருந்தது. மூன்று நிறுவனங்களிலும் இதுவே அதிகபட்சத் தொகையாக இருந்தது. இருப்பினும் டென்டர்திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஐ.சி.சி. மீண்டும் டென்டர் விடுத்துள்ளது. இப்போதும் ஜீ டிவி போட்டியில் இருந்தது. இது சரியானதல்ல என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதி பானிக்கிரஹி, ஐ.சி.சிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
யு.என்.ஐ.