டொரன்டோ தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ரெடி
துபாய்:
கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில்விளையாட இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது.
டொரான்டோ தொடரில் இந்தியா நிச்சயம் விளையாடும். போட்டியில் தனது பங்கேற்பு குறித்து போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு விரைவில் தகவல்தெரிவிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் லேலே தெரிவித்தார். கல்ஃப் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்அவர் இதைத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிராக டொரன்டோ தொடரில் விளையாட பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மதம் தெரிவித்துள்ளது. செப்டம் 9 முதல் 17 வரை இந்தஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான் தனது சம்மதம் தெரிவித்த பிறகும் இந்தியா தனது சம்மதத்தைத் தெரிவிக்காமல்இருந்ததை அடுத்து போட்டி ஏற்பாட்டாளர்கள் கவலை அடைந்தனர்.
கார்கில் போருக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதில்லை என்று இந்தியா முடிவு செய்திருந்ததே இதற்குக்காரணம். கார்கில் போருக்குப் பிறகு நடந்த டொரான்டோ போட்டியில் கூட இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாக மோதிக் கொள்ளவில்லை.மூன்றாவது நாடாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இரு அணிகளும் தலா 3 ஆட்டங்களில் விளையாடின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு டொரான்டோ தொடரில் இந்தியா பங்கேற்காத பட்சத்தில் கிரிக்கெட் விளையாடும் வேறு நாட்டு அணியை அழைத்து போட்டியை நடத்துவதுஎன்று அவர்கள் முடிவு செய்திருந்தனர். இந் நிலையில், இந்தியா தனது சம்மதத்தைச் சமீபத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பகைமையை மறந்து சேர்ந்து விளையாடுவது என்றுஎடுத்த முடிவை அடுத்து இந்தியா தனது சம்மதத்தைத் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.