தமிழகத்தில் இன்று
கோவை அரசு பொருட்காட்சியில் ரூ. 28.5 லட்சம் வருவாய்
கோவை:
கோவையில் நடந்த அரசு பொருட்காட்சியில் ரூ. 28. 5 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
கோவையில் கடந்த இரண்டு மாதங்களாக அரசு நடத்தும் பொருட்காட்சி நடந்தது. இதன் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் மாநில செய்தித்துறை அமைச்சர் முல்லைவேந்தன் பேசியதாவது:
அரசு சார்பில் பொருட்காட்சி நடத்துவதில் தற்போது வருவாய் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் இது ரூ. 8 கோடியைத் தாண்டும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பொருட்காட்சியை சேலம் மற்றும் திருநெல்வேலியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கோவையில் நடந்த பொருட்காட்சியில் ரூ.28.5 லட்ச ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது என்று அவர் பேசினார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேசுகையில், கோவையில் நீச்சல் குளம் அமைக்க அரசு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.மேலும், ரூ.5 கோடியில் கோள மையம் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதே போல் அரசு பொருட்காட்சிக்கென நிரந்தர வளாகம் அமைக்க வேண்டும் என்றார்.
அரசு பொருட்காட்சியில் இடம் பெற்ற அரங்குகளில் கோவை நகர போலீஸ் அமைத்த அரங்கு முதலிடம் பெற்றது. இரண்டாவதாக, கோவைமருத்துவக் கல்லூரி அரங்கும், 3வது இடத்தை தாட்கோ அரங்கும் அதிக அளவில் மக்களைக் கவர்ந்ததாக அமைந்தது.