தமிழகத்தில் இன்று
இந்தியர் நிலங்களிலும் பங்கு வேண்டும்...பிஜி இனத்தவர்களின் புதிய கோஷம்
சுவா:
தென் பசிபிக் பெருங்கடல் நாடான பிஜியில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. புரட்சிப் படையினரின்ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில்ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியர்களிடமுள்ள நிலங்களிலும் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று கேட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் நடந்த புரட்சிக்குப் பிறகு பிஜியில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில், இந்த வன்முறை, ஆர்ப்பாட்டம்போன்றவைகளால் பிஜி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையில் நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்த புரட்சிப்படையினர் பிரதமர் மகேந்திர சவுத்ரி உள்படபலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
அதன்பிறகு பிஜியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் ராணுவத்தின் கையில் ஆட்சி வந்தது. பல முறை பேச்சு நடந்த பிறகு பிணைக் கைதிகளில் பலர்விடுவிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் உள்பட 27 பேர் இன்னும் விடுவிக்கப்பட்டவில்லை.
இந் நிலையில், பிஜியில் முழுவதும் பிஜி நாட்டவர்களைக் கொண்ட இடைக்கால அரசு சில தினங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. புரட்சிப்படையினரின்கோரிக்கையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் ராணுவம் இருந்தது.
ஆனால், பிணைக் கைதிகளை விடுவிக்க புரட்சிப் படையினர் மறுத்துவிட்டனர். இப்போது அவர்கள் புதிய கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்திய வம்சாவழியினரிடம் உள்ள நிலங்களை மீட்டு அவற்றை பிஜி நாட்டவர்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி புரட்சிப் படையினரின் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரோவூ பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்த 16 போலீஸ் அதிகாரிகள் உள்பட பலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்துள்ளர்.
கோரோவூ தவிர பிஜியின் மற்ற பகுதிகளிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தலைநகர் சுவாவுக்கு அருகே உள்ள லாமியில் பெரும் கூட்டமாக வந்தபுரட்சிப் படையினரின் ஆதரவாளர்கள் முக்கிய சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மோனாசாவு என்ற இடத்தில் உள்ள நீர்மின் நிலைய அதிகாரிகளையும், ஊழியர்களையும் அப் பகுதியைச் சேர்ந்த புரட்சிப் படையினரின் ஆதரவாளர்கள்சிறைப்பிடித்து வைத்துள்ளனர்.
நாடு முழுவதும் ஜார்ஜ் ஸ்பீட்டுக்கு ஆதரவாக பிஜி நாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும் கூட்டமாகக் கூடி கோஷம் போட்டு வருகின்றனர்.
திடீரென்று ஏற்பட்ட இப் பிரச்சினையை அடுத்து நிலைமையைச் சமாளிக்க சம்பவ இடங்களுக்கு அதிக அளவில் ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.நிலையை மேலும் மோசமடையாமல் தடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.