ஒரு நாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேக்கு இரண்டாவது வெற்றி
லண்டன்:
மூன்று நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே 5 விக்கெட்வித்தியாசத்தில் இங்கிலாந்தைத் தோற்கடித்தது.
ஜிம்பாப்வேக்கு இது இரண்டாவது வெற்றியாகும். ஏற்கெனவே பிர்ஸ்டாலில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் 6 விக்கெட்வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஜிம்பாப்வே தோற்கடித்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.டிரெஸ்கோதிக் 79 ரன்களும், ஹிக் 50 ரன்களும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே அணியில் ஸ்டிராங், பிளவர் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. குறைந்த ரன்களில் 3 விக்கெட்டுகளைஇழந்து ஜிம்பாப்வே தவித்தது.
அப்போது கேம்ப்பெல்லும், ஆன்டி பிளவரும் ஜோடி சேர்ந்து ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கேம்ப்பெல் 80 ரன்களும், பிளவர்63 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து வந்த கிரான்ட் பிளவரும் தன் பங்குக்கு 33 ரன்களைக் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இறுதியில் 48.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. ஆட்ட நாயகராக ஜிம்பாப்வே அணியின்கேம்ப்பெல் தேர்வு செய்யப்பட்டார்.
இப் போட்டித் தொடரின் அடுத்த ஆட்டம் இங்கிலாந்துக்கும், மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையே லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.