மூன்று நாடுகள் கிரிக்கெட்: தெ. ஆப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் தோல்வி
கொழும்பு:
இலங்கையில் நடைபெற்று வரும் மூன்று நாடுகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்தது.
கொழும்பு, பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.
காலிஸ் சிறப்பாக ஆடி 83 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து துவக்க ஆட்டக்காரர் கிர்ஸ்டன் 52 ரன்களும், குல்லினன் 39 ரன்களும் எடுத்தனர்.பாகிஸ்தான் தரப்பில் அப்துர் ரஸாக் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியில் இம்ரான் நசீர் சிறப்பாக ஆடி 80 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியா, சயீத் அன்வர் 39 ரன்களும், யூனிஸ் கான் 38 ரன்களும்எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்க வீரர்கள் நிக்கி போயே 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் குளூசனர் 37 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகராக தென் ஆப்பிரிக்க அணியின் காலிஸ் தேர்வு செய்யப்பட்டார். இப் போட்டித் தொடரின் அடுத்த ஆட்டம் பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும்இடையே கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
யு.என்.ஐ.