தமிழகத்தில் இன்று
உலகக் கோப்பைக் கால்பந்து: ஜெர்மனி விட்டுக் கொடுக்க கோரிக்கை
யாயோண்டி (காமரூன்):
2006-ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை தென் ஆப்பிரிக்கா நடத்த, ஜெர்மனி விட்டுத் தர வேண்டும் என்று காமரூன் அணியின்முன்னாள் வீரர் ரோஜர் மில்லா கூறியுள்ளார்.
2006-ம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை ஜெர்மனி நடத்தவுள்ளது. போட்டியை நடத்தும் நாட்டைத் தேர்ந்தெடுக்க கடந்தவாரம் நடந்த தேர்வில் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்தது.
ஓசியானியா பிரிவைச் சேர்ந்த பிரதிநிதி சார்லி டெம்ப்சி எதிர்பாராதவிதமாக வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்ததால் தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா போட்டியை நடத்தும் விதத்தில், ஜெர்மனி விட்டுக் கொடுக்க வேண்டும் என முன்னாள் காமரூன் வீரர் ரோஜர் மில்லாகாமன் டி.வியில் அளித்த பேட்டியில், கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான மில்லா, தென் ஆப்பிரிக்கா கால்பந்துப் போட்டியை நடத்துவதற்காக தீவிரப் பிரசாரம் செய்துவந்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மில்லா தொடர்ந்து கூறுகையில், ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த நாடு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியை நடத்தக் கூடாது என்பதற்காகவே கடைசிநிமிஷத்தில் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு உள்ள ஒரே வழி, ஜெர்மனி போட்டியிலிருந்து விலகிக் கொண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு வழிவிட வேண்டும் என்றார் அவர்.