தமிழகத்தில் இன்று
25 ஆண்டுக்குப் பிறகு கைகுலுக்கிக் கொண்ட அமெரிக்காவும், வியட்நாமும்
வாஷிங்டன்:
எதிரிகள் நண்பர்களாவது இன்றைய பேஷன். அந்த வரிசையில் சேர்ந்திருக்கின்றன அமெரிக்காவும், வியட்நாமும்.
25 ஆண்டுகளுக்கு முன் நடந்த போரில் பட்ட அவமானத்தை மறந்து அமெரிக்காவும், போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை மறந்து வியட்நாமும்,வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
வியாழக்கிழமை வாஷிங்டனில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையே முதல் முறையாக வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. மேலும், வியட்நாம், உலக வர்த்தகக் கழகத்தில் சேருமாறும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம், இரு நாடுகளுக்குமிடையிலான சரக்குப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் குறைக்கப்படும். மேலும், இரு நாடுகளிலும்முதலீடுகள் அதிகரிக்கப்படும்.
அமெரிக்கா சார்பில் சார்லீன் பார்ஸ்வ்ஸ்கியும், வியட்நாம் சார்பில் அந்நாட்டு வர்த்தக அமைச்சர் வூ கோவானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். நான்குவருடமாக இதுதொடர்பான பேச்சவார்த்தை நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம் குறித்து அமெரிக்க அதிபர் கிளிண்டன் கூறுகையில், கசப்பான கடந்த காலத்திலிருந்து, மீண்டு சிறந்த எதிர்காலத்திற்கு நாங்கள் விதைவிதைத்திருக்கிறோம்.
முன்னாள் எதிரிகள் ஒன்று சேர முடியும் என்பதற்கு இந்த ஒப்பந்தம் ஒரு நல்ல உதாரணம். மக்களுக்குப் பலன் அளிக்கும் வகையில், பொதுவான கருத்தின்அடிப்படையில் நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்.
கடந்த காலத்தை மறப்போம். வளமான எதிர்காலத்தை வரவேற்போம் என்றார் கிளிண்டன். இந்தப் பேட்டியின்போது வியட்நாம் தலைநகர் ஹனோயில்,ஐந்தரை ஆண்டுகாலம் சிறைவாசம் மேற்கொண்ட அமெரிக்க கடற்படை முன்னாள் விமானி ஜான் மெக்கெய்னும் இருந்தார். இவர் இப்போது குடியரசுக்கட்சி எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.
1975-ல் முடிந்த வியட்நாம் போரில் அமெரிக்கா பெரும் தோல்வியையும், அவமானத்தையும் சுமந்து கொண்டு நாடு திரும்பியது. இந்தப் போரில்58,000 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 1996-ம் ஆண்டு வியட்நாமுடன் சுமூக உறவு வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் கிளிண்டன்மேற்கொண்டார். அதன் முதல் கட்டமாக இப்போது வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் வியட்நாமுக்கு 500 மில்லியன்டாலர் வெளிநாட்டு முதலீடு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசியாவின் அடுத்த பொருளாதார சக்தி என்ற பெயர் விரைவில் வியட்நாமுக்குக் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் அதற்கு முன்அந்நாட்டுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்கா விரும்பியது.