தமிழகத்தில் இன்று
"வெற்றிக்கொடிகட்டு"
சமூகப்பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொண்டு வெற்றிக்கொடி கட்டிக்கொண்டிருக்கும் சேரனுக்கு வாழ்த்துக்கள். பாரதிகண்ணம்மா- ஜாதீயகொடுமை. பொற்காலம்- உடல், மன ஊனத்தைப்பற்றியபடம். தேசீயகீதம் -தற்பொழுதைய அரசியல் சூழ்நிலைகளை மையமாகக்கொண்ட படம்.
இவைகளையடுத்து சேரன் கையில் எடுத்துக்கொண்டிருக்கும் பிரச்சனை. வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்கள் பற்றியது. (வெளிநாடுகளில் சென்றுவெற்றிக் கொடி நாட்டி வரும் இந்தியர்களுக்கு நிச்சயம் கோபம் தரும்).
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டை என்கிற ரேன்ஜில் ஒரு விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளார்சேரன்.
வெளிநாட்டுக்கு வேலைக்குப்போய் தான் சம்பாதிக்க வேண்டும் என்று பித்துபிடித்து கையில் உள்ள பணத்தை எல்லாம் இழந்துவிட்டு எதிர்காலத்தையும்கேள்விக்குறியாக்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தன் வெற்றிக்கொடிகட்டு படத்தை படமாக மட்டுமல்ல பாடமாகவும் அமைத்திருக்கிறார்சேரன்.
பார்த்தீபனும், முரளியும் பணத்தை இழந்த பிறகு ஊருக்குப்போனால் என்ன ஆகும் என்கிற கற்பனைக்குப்பின் இருவரும் இணைகிறார்கள். அவர்களதுஇரண்டு குடும்பங்களைக்காட்டி கதை நகர்கிறது. ஒரு டாக்குமென்டரி படமாகவோ, பிரச்சார படமாகவோ வந்துவிடக்கூடாது என்பதற்காககத்திமேல் நடப்பது போல் பார்த்து பார்த்து அடி எடுத்து காட்சிகள் அமைத்துள்ளார் சேரன்.
பார்த்தீபனை முரளியின் வீட்டுக்கும், முரளியை பார்த்தீபன் வீட்டுக்கும் இடம் மாறிக் கொண்டு இருவருமே துபாயில் வேலை பார்ப்பதாகசொல்லிக்கொண்டு வீட்டார்களை நம்பவைக்கிறார்கள். பார்த்தீபன் பால்வியாபாரத்தை தொடங்குவது போல முரளியும் ஒரு ஹோட்டலை ஆரம்பித்துவெற்றிக்கொடி கட்டுவதுதான் கதை.
பழனியில் இரு நண்பர்களும் சந்திக்க திட்டமிடுகிற நேரத்தில், மனோரமா பிராத்தனைக்காக மொட்டை போட்டுக் கொள்வதும், மீனாகணவனுக்காக நேர்திக்கடன் நிறைவேற்ற மனோரமாவுடன் பழனிக்கு வர பார்த்தீபனும், முரளியும் இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து விடாமல்சமாளிக்கின்ற காட்சிகளில் நல்ல கலகலப்பு.
நிறைமாத கர்பிணியாக மீனா. வேண்டுதல் என்று ஆணி செருப்பில் நடப்பதும், மனோரமா மொட்டை போட்டுக்கொண்டு முருகா முருகா என்று பழனியில்பக்திப்பரவசத்தில் கோவிலை சுற்றிவருவது கதையோடு ஒட்டிய, தாய்மார்களை கவர்கின்ற விஷயம் என்றாலும் இன்னும் இந்தமாதிரி"சென்ட்ட்ட்ட்டிமென்ட்" எல்லாம் தேவையா என்று கேள்வி கேட்க வைக்கிறது.
கதாபாத்திரங்களிடையே சஸ்பென்ஸ் வைத்து கதை சொல்லப்பட்டிருக்கிறது. பார்த்தீபனும் வடிவேலுவும் சந்திக்கின்ற காட்சிகள் சிரிக்க வைப்பதற்காகவேஎன்று தெரிந்து சிரிக்க வேண்டியிருக்கிறது. கவுண்டமணி , செந்தில் கூட்டணி போல பார்த்தீபன் வடிவேலு கூட்டணி அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
மீனா தன் பெற்றோர்களிடம் சவாலாக பேசிவிட்டு, மனதுக்கு பிடித்த ஒரு ஆம்பிளையாக இருந்தாலே போதும் என்று வசனம் பேசும் இடமாகட்டும்,கணவனுக்கு துபாயில் வேலை கிடைத்துவிட்டதை ஜாடையாக பேசும் இடமாகட்டும், அப்பா விஜயகுமார் வளைகாப்பு நடத்த சமையலுக்கு அட்வான்ஸ்கொடுக்கிற காட்சியாகட்டும் அனைத்தையுமே கைதட்டும் அளவுக்கு செய்திருக்கிறார்கள்.
மாளவிகாவின் கனவு நாயகன் முரளி கருப்பு நிறம் என்பதால் அந்த கருப்பு நிறம் தான் எனக்கு பிடிக்கும் என்று கவிஞர் விஜயன் எழுதிய பாடலை, மிகநன்றாகவே படம் பிடித்திருக்கிறார்கள்.
பார்தீபனும், முரளியும் நடிப்பது போலவே தெரியவில்லை. கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட சிறப்புகள் இருந்தபோதும், கதை ஒட்டத்தில் இடைவேளைக்குப்பிறகு ஏற்படும் தொய்வை குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை.