ஜெ.-மூப்பனார் ஆட்சியா? சிரிக்கிறார் வைகோ
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க பிரமுகர் இல்லத் திருமண நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக பரமக்குடி வந்திருந்தார் ம.தி.மு.கவின் பொதுச்செயலாளர் வைகோ. வைகை பயணியர் விடுதியில் நிருபர்களை சந்தித்தார்.
ஜெயலலிதாவும் , மூப்பனாரும் ஒருவருக்கொருவர் கூட்டணி ஆட்சி, தனித்து ஆட்சி என்று மாறி மாறி அறிக்கை விட்டு கற்பனை உலகில் மிதந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களால் ஒரு போதும் ஆட்சியமைக்கமுடியாது.
ஜெயலலிதா செய்துள்ள ஊழல்கள், வெளிநாட்டில் அவர் வாங்கிக்குவித்த சொத்துக்கள் பற்றிய விபரங்கள் தினம் வந்து கொண்டிருக்கின்றன. கோடிகோடியாக கொள்ளை அடித்து ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று முன்பே நான் குற்றச்சாட்டு கூறியிருந்தேன். இப்படி ஊழல் செய்தவர்கள் தண்டனையில்இருந்து தப்ப முடியாது.
தி.மு.க அரசு நல்லாட்சி நடத்தி வருகிறது. கட்டுமானப்பணிகள், தேசிய நெடுஞ்சாலைகள், பாலங்கள், திட்ட வளர்ச்சிப் பணிகளில் அக்கறை செலுத்திபொருளாதாரரீதியில் முன்னேற்றம் அடையும் வகையில் கருணாநிதி அரசு செயல்பட்டு வருகிறது.
சாதி மத வேறுபாடு இன்றி சகோதரத்துவம் ஓங்கவும், ஒற்றுமை நிலவவும் நாம் பாடுபடவேண்டும். சமூக நீதி எங்கள் உயிர்க்கொள்கை.ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக பொருளாதாரரீதியில் உரிமை கொடுக்கப்படவேண்டும் என்பதே எங்களது கொள்கையாகும்.
ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் நலன் கருதித் தான் தமிழக, கர்நாடக அரசுகள் செயல்பட முடியும். அதன்அடிப்படையில் கருணாநிதி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சட்ட சம்பந்தமான பிரச்சனைகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருந்தாலும், இப்பிரச்சனையின் கடுமையைக்கருதி, அவசரப்பட்டு எந்த தரப்பினரும்கருத்துக்கள் சொல்வது நல்லதல்ல என்றார் வைகோ.