தப்பியோடிய பிஜி இந்தியர்களுக்கு அகதிகள் அந்தஸ்து
சுவா:
பிஜித் தீவில் நடந்த புரட்சி மற்றும் உள்நாட்டுக் குழப்பத்தையடுத்து அங்கிருந்து தப்பி வெளியேறிய பிஜி இந்தியர்களுக்கு அகதிகள் அந்தஸ்துவழங்கப்படவுள்ளது.
காமன் வெல்த் அமைப்பின் மனித உரிமைகள் விவகார பிரிவின் பிரதிநிதிகள், ஆஸ்திரேலியா, நியுசிலாந்தைச் சேர்ந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கியகுழு சமீபத்தில் பிஜியில் நடத்திய நேரடி ஆய்வுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிஜியிலுள்ள தங்களது வீடுகளிலிருந்து தப்பி பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 350 பிஜி இந்தியர்கள் உண்மையிலேயே அகதிகளாகத் தப்பிவந்தவர்கள்தான் என்று இந்தக் குழுவின் விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த மே மாதம் முதல் நைடாசிரி மாவட்டத்திலுள்ள லடோகா பகுதியில் 350 பிஜி இந்தியர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர். மே 19 ம்தேதி ஜார்ஜ் ஸ்பைட் தலைமையிலான புரட்சிக்கும்பல் இந்திய வம்சாவளிப் பிரதமர் மகேந்திர பால் செளத்ரியை பிணைக் கைதியாகப் பிடித்து வைத்தது.
இதையடுத்து தலைநகர் சுவாவில் வன்முறை வெடித்தது. சுவா தவிர வேறு பல நகரங்களிலும் இந்திய வம்சாவளியினர் தாக்கப்பட்டனர். இதையடுத்துபாதுகாப்பு தேடி இந்தியர்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.
லடோகா முகாமிலுள்ள இந்தியர்களிடம் காமன்வெல்த் அமைப்பின் உண்மை அறியும் குழுவினர் விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் அவர்களுக்குஅகதிகள் அந்தஸ்து தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
முகாம் ஒருங்கிணைப்பாளர் அனித் சிங் கூறுகையில், உண்மை அறியும் குழுவினர் முகாம்களில் உள்ள இந்தியர்களிடம் பல முறை விசாரணை நடத்தினார்கள்.அவர்கள் உண்மையான அகதிகள் என்று அறிவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு பல உதவிகளும் அளிக்கப்படும் என்று காமன்வெல்த் குழுவினர்நம்பிக்கை தெரிவித்தனர் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.