எங்களைக் காப்பாற்ற வீரப்பன் தேவையில்லை... மைசூர் தமிழர்கள்
மைசூர்:
மைசூரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட தமிழர் பிரதிநிதிகள் பேரணி முடிவில் எங்களைக் காப்பாற்ற வீரப்பன் தேவையில்லை என்று தெரிவித்தனர்.
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கக் கோரியும், தமிழர்களுக்குப் பாதுகாப்புக் கோரியும் மைசூரில் பல்வேறு தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள்வெள்ளிக்கிழமை பேரணி நடத்தி கலெக்டரிடம் மனுக் கொடுத்தனர்.
நடிகர் ராஜ்குமார் கடத்தலால் கர்நாடகத்தில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது. மைசூர், சென்னப்பட்னா, மண்டியா மாவட்டங்களில்தமிழர் பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
ராஜ்குமார் கடத்தப்பட்டு 39 நாட்கள் ஆகியுள்ள நிலையில் மைசூரில் பல தமிழ் அமைப்புக்கள் சார்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடந்தது. மைசூர் அரண்மனைமுன்புள்ள ஆஞ்சனேயர் சிலைக்கு பூஜைகள் செய்து பேரணி தொடங்கியது.
கலெக்டர் அலுவலகத்தில் முடிந்த பேரணியின் இறுதியில் மாவட்டக் கலெக்டர் பசவராஜிடம் தமிழர் பிரதிநிதிகள் மனுக் கொடுத்தனர்.
பேரணியில் கலந்து கொண்ட தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடகத்தில் தமிழர்கள் பல ஆண்டுகளாக வசித்துவருகிறார்கள். கன்னட மக்களுடன் ஒற்றுமையுடன் இருந்து வருகிறார்கள்.
இன, மத ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் கர்நாடகத் தமிழர்களைக் காக்க வீரப்பனுக்கு எந்த அவசியமும் இல்லை. உடனடியாக ராஜ்குமாரை விடுவிக்கவேண்டும் என்று கூறினர்.
முன்னதாக, பேரணியின் இடையே மாநில கல்விஅமைச்சர் விஸ்வநாத், மைசூர் மேயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.