பருத்தி ஆராய்ச்சி: கோவை வேளாண் பல்கைலக்கழகத்துக்கு உலக வங்கி நிதியுதவி
கோவை:
கடலோரப் பருத்தி சாகுபடி ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக உலக வங்கி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு 8. 49 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது.
இது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கண்ணையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த ஜவுளித் தொழில் வளர்ச்சிக்கு அவசியமானது பருத்தியாகும். இங்கு ஆண்டுக்கு 170 லட்சம் பேல்கள் பருத்தி, 92லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் ஜவுளித் துறையின் தேவை 220 லட்சம் பேல்களாக உள்ளது.
இந்த உற்பத்திப் பற்றாக் குறையைத் தீர்க்க கடலோரங்களில் பருத்தி பயிரிடுவது குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஆய்வு நடத்திவருகிறது. இந்த ஆய்விற்கு உலக வங்கி ரூ. 8.49 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளது.
இந்த ஆய்வை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ரவீந்திரன், கோவில்பட்டி வேளாண்மைக் கல்லூரிப் பேராசிரியர் முப்பிடாதிஆகியோர் மேற் கொள்கின்றனர். இந்த ஆய்வு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நடக்கும். கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் கடலோரப்பகுதியில் பருத்தி சாகுபடி செய்ய முடியுமா என்பது குறித்து இந்த ஆய்வு அமையும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கண்ணையன்.