வட கிழக்கு மாநில ராணுவ வீரர்களின் புதிய எதிரி - எய்ட்ஸ்
கெளஹாத்தி:
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள எல்லைப் பாதுகாப்பு உள்பட புற ராணுவப் படை வீரர்கள் பலர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சிதரும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வட கிழக்கு மாநிலங்களில் போதைப் பொருட்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும், விபச்சாரமும் அதிகரித்து வருகிறது எனவும் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் 50 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபுள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 2 பேர் இறந்தனர்.
இதைத் தடுக்கும் வகையிலும், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள், ராணுவ வீரர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பலபிரச்சாரஙகள் மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களும், ராணுவ உயர் அதிகாரிகளும் முயன்று வருகின்றனர்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் கெளஹாத்திப் பிரிவு டி.ஜி.பி.சர்மா கூறுகையில், எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சையளிப்பதை விட, அந்தநோய் வராமல் தடுப்பதே நல்லது என்றார்.
எச்.ஐ.வி.நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள வீரர் ஒருவர் கூறுகையில், நான் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டதால்இந்த நோய்க்கு ஆளாகியுள்ளேன். என்னைப் போல் எனது சகஊழியர்களும் இந்த நோயால் பாதிக்கப்படக் கூடாது. அவர்கள் மிகவும் கவனமாகவும்,எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் மத்திய ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் நாடாளுமன்றத்தில் கூறுகையில், 1990 முதல் 1999 ம் ஆண்டு வரை எடுக்கப்பட்டபுள்ளிவிவரங்கள் படி வடகிழக்கு மாநிலங்களில் 2, 527 மத்திய புறக்காவல் படை வீரர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
சுகாரதார அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் 7 வடகிழக்கு மாநிலங்களிலும் மொத்தம் 50,000 பேர் எச்.ஐ.வி. வைரசால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
1998 ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியா முழுவதும் எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30.5 லட்சத்தைத் தாண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் இந்தியா முழுவதும் எச்.ஐ.வி.நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று அதிகாரப்பூர்வமற்ற ஒரு தகவல் தெரிகிறது.ஐ.ஏ.என்.எஸ்.