வேப்ப மரத்துக்கும், அரச மரத்துக்கும் கல்யாணம்...
சென்னை:
அழைப்பிதழ் கொடுத்து, ஊரையே வரவழைத்து, வாழையிலை போட்டு, விருந்தும் வைத்து, வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும் கல்யாணம் செய்துவைத்தார் ஒரு விவசாயி.
காய்ந்து கிடக்கும் பூமிக்கு மழை வேண்டி நடந்த இந்த கல்யாணம் முடிந்ததுமே மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் தீர்த்து விட்டது. நம்பிக்கைபலித்த சந்தோஷத்தில் அந்த ஊரே மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
தமிழகத்தில் காஞ்சுபோன மாவட்டம் எதுவென்று கேட்டால் பட்டென்று திருவள்ளுவர் மாவட்டம் என்று பதில் சொல்லி விடலாம்.ராமநாதபுரத்துக்கு போட்டியாய் அப்படி ஒரு வறட்சி. ஆந்திர எல்லையோரம் இருக்கும் இந்த மாவட்டத்தில் பள்ளிப்பட்டு என்றொரு கிராமம்.மழை பெய்தால் தான் குடிநீர், விவசாயம் எல்லாமே என்பதுதான் இக்கிராமத்தின் தலைவிதி.
இங்குள்ள பெருமாள் என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்தில் வேம்பு மரம், அரச மரம் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து வளர்ந்து வந்தது.வழக்கமாக இந்த இரு மரங்களையும் வேண்டுமென்றே ஒன்றாக நட்டு இப்படி வளரச் செய்வது உண்டு.
ஆனால், அப்படி எதுவும் செய்யாமல் அதிசயமாக இரண்டு மரங்களுமே இயற்கையாகவே இணைந்து வளருவதை கண்ட பெருமாள், அவற்றிற்குதிருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நினைத்தார். அதை ஊரும் நம்பியது.
திருமணத்திற்கான ஏற்பாடுகள் தயாராகின. முகூர்த்த நேரம் குறிக்கப்பட்டது. அழைப்பிதழ் அச்சடிக்கப்ப்டடு வீடு வீடாக கொடுக்கப்பட்டது.
திருமண நாளன்று ஊரே பெருமாளின் நிலத்தில் கூடியது. பெரியோர்கள் முன்னிலையில் இரண்டு மரங்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. வந்திருந்தவர்கள்அனைவரும் மணம் முடித்த புதுத் தம்பதிகளான மரங்களை வணங்கிச் சென்றனர்.
கல்யாணம் முடிந்த கையோடு தடபுடலாக விருந்தும் பரிமாறப்பட்டது. காலையில் கல்யாணம்; மாலையில் பேய் மழை அப்பகுதியை குளிப்பாட்டி விட்டது.இப்போது பெருமாளும், அந்த மரங்களும் பிரபலமாகி விட்டன.