வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாகிறது
சென்னை:
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையும், எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரம் கட்டாயமாக்கப்பட்டுவிடும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்தார்.
சென்னையில் புதன் கிழமை குப்தா அளித்த பேட்டி:
இந்த தேர்தலில் புகைப்படம் ஒட்டிய வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியாது என்பதை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துவிடும். எனவே அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு விடும்.
அதேபோல் வாக்குப்பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பதும் கட்டாயமாகிறது.
தற்போது நமது கைவசம் 9 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் உள்ளன. ஆனால், 55 ஆயிரம் இயந்திரங்கள் வாக்குப்பதிவுக்குதேவை. அதோடு 25 ஆயிரம் இயந்திரங்கள் மாற்று உபயோகத்திற்கு கைவசம் இருக்க வேண்டும்.
மொத்தத்தில் 80 ஆயிரம் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. இதில் பாதி இயந்திரங்களை வாங்க முடிவு செய்துள்ளோம். மீதியை தேர்தல் முடிந்த பக்கத்துமாநிலங்களில் இருந்து பெறத் திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் அடையாள அட்டை வழங்கும் பணி மிகவும் பின் தங்கியிருப்பதாக தலைமை தேர்தல் கமிஷன் கண்டித்துள்ளது உண்மை தான். அடையாள அட்டைவழங்குவதில் கேரளாவும், மேற்கு வங்காளம் மிகவும் மெதுவாக செயலபடுகின்றன. அவற்றை விட தமிழகம் மெதுவாக செயல்படுகிறது என்றுதலைமை தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
இதற்கு காரணம் தவறான அடையாள அட்டைகளை மாற்றும் பணியில் ஈடுபட்டது தான். இவற்றை கண்டுபிடித்து மாற்றுவதற்கு அதிக காலம் ஆகிவிட்டது.
இந்த மாத இறுதிக்குள் எல்லா மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் அடையாள அட்டைகள் வழங்கும் பணி நடைபெறும். நவம்பர் மாதத்தில் மீண்டும்வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படும். விடுபட்டவர்களுக்கு அட்டைகள் வழங்க வாய்ப்பு தரப்படும்.
நவம்பர், டிசம்பருக்குள் எல்லா வாக்காளர்களுக்கும் அடையாள அட்டைகளை வழங்கி முடித்து தேர்தலுக்கு தயாராகி விடுவோம் என்றார் குப்தா.