வாஷிங்டனில் வாஜ்பாய்க்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் வாஜ்பாயிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
தலைநகர் வாஷிங்டனில் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை எதிரே உள்ள பிளேர் மாளிகைக்கு வியாழக்கிழமை காலை வந்தார் வாஜ்பாய். அங்குஅவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். வாஜ்பாயியுடன் பேசிய அவர்கள், அமெரிக்காவுக்கும்இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பெற நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டனர்.
நியுயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சமீபத்தில் நடைபெற்ற மில்லேனியம் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அங்கிருந்து வாஷிங்டனுக்குப்பிரதமர் வாஜ்பாய் விமானம் மூலம் வந்து சேர்ந்தார்.
கடந்த 7-ம் தேதியே அவர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டாலும், வியாழக்கிழமையிலிருந்துதான் அமெரிக்காவுக்கான அவரதுஅதிகாரப்பூர்வ அரசு முறைப் பயணம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதைக் குறிக்கும் வகையில்தான் அவருக்கு சிறப்பான மற்றும் உற்சாகமான சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிளேர் மாளிகைக்கு வந்த வாஜ்பாயியை வெள்ளை மாளிகையின் வரவேற்புக் குழுத் தலைவர் மேரி மெல் பிரெஞ்ச், தெற்காசிய விவகாரங்களுக்கானவெளியுறவுத் துறை உதவி அமைச்சர் கார்ல் இந்தர்பர்த், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு செலெட்டி மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள்பலர் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வாஜ்பாயியுடன் அவரது முதன்மைச் செயலரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான பிராஜேஷ் மிஷ்ரா, வெளியுறவுத் துறைச் செயலர் லலித் மான்சிங்,அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நரேஷ் சந்த்ரா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரும் வந்தனர்.
முன்னதாக வாஷிங்டன் ஆன்ட்ரூ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோட்டார் சைக்கிள்கள் பின்தொடர கார் மூலம் பிளேர் மாளிகைக்குஅழைத்து வரப்பட்டார்.
விமான நிலையத்துக்கு வந்திருந்த அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சுமார் 50 பேர் இந்திய மற்றும் அமெரிக்க தேசியக் கொடிகளைக் கையில்பிடித்து உயர்த்திக் காட்டி வாஜ்பாயை வரவேற்றனர். வாஜ்பாய் வாழ்க, ஜெய் ஹிந்த் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
விமான நிலையத்திலிருந்து பிளேர் மாளிகை வரை வாஜ்பாயை ஹெலிகாப்டரில் அழைத்து வர அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவருக்கு மூட்டுவலி உள்ளதால் அவரால் ஹெலிகாப்டரில் ஏறி இறங்க முடியாது என்பதால் அத் திட்டம் கைவிடப்பட்டது.
பிளேர் மாளிகையில் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை 10 நிமிடங்கள் எழுந்து நின்று வாஜ்பாய் ஏற்றுக் கொண்டார். வெள்ளை மாளிகை பாண்டுவாத்தியக் குழுவினர் இந்திய மற்றும் அமெரிக்க நாட்டு தேசிய கீதங்களை இசைத்தனர்.
பிளேர் மாளிகையில் இந்திரா காந்திக்குப் பிறகு தங்கும் அடுத்த பிரதமர் வாஜ்பாய்தான். 1966-ம் ஆண்டு அரசு விருந்தினராகச் சென்றிருந்தபோதுபிளேர் மாளிகையில் இந்திரா காந்தி தங்கினார்.
இந்த அரசு முறைப் பயணத்தில் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனுடன் வெள்ளை மாளிகையில் வாஜ்பாய் வெள்ளிக்கிழமை பேச்சு நடத்துகிறார். பின்னர்வெளியுறுத் துறை அமைச்சகத்தில் துணை அதிபர் அல் கோர் அளிக்கும் மதிய உணவு விருந்தில் கலந்து கொள்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.