பாண்டிச்சேரியில் த.மா.க. உடைந்தது: ஆட்சி கவிழும்?
சென்னை:
ஒரு எம்.எல்.ஏ. மூலம் ஆட்சி கவிழ்வது, நினைத்தபோதெல்லாம் கட்சிகள் உடைவது எல்லாம் பாண்டிச்சேரியில் மிகச் சாதாரணமான விஷயம். திமுக, அதிமுக,காங்கிரஸ், இப்படி எல்லா கட்சிகளுமே உடைந்துள்ளன.
இப்போது த.மா.கா. இரண்டாக உடைந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் உருவானதில் இருந்து அதில் ஏற்பட்டுள்ள முதல் பிளவு இது தான்.
அமைச்சர் கண்ணன் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட முடிவு செய்துள்ளனர். இந்த அணி மிக விரைவில் "புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் கண்ணன்தலைமையில் தனிக் கட்சியாக மாறவிருக்கிறது.
த.மா.காவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பிளவு எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும், அதனால் அம்மாநிலத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் ஆட்சியின் ஆயுள் காலம்கேள்விக் குறியாகி உள்ளது.
பாண்டிச்சேரியில் திமுக ஆட்சியை கவிழ்த்து விட்டு காங்கிரஸ் - தமாகா இணைந்து அதிமுக ஆதரவுடன் மாற்று ஆட்சி ஏற்படுத்தும் முயற்சி நடந்தபோது, அம்மாநிலதமாகா தலைவர் கண்ணனும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்திக்கு ஆளாகினர்.
முதல்வர் பதவியை ஆவலோடு எதிர்பார்த்த கண்ணனுக்கு வெறும் அமைச்சர் பதவி தான் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், அவரது ஆதரவாளர்களுக்கு அமைச்சர்பதவி கிடைக்கவில்லை. மாறாக அவரது எதிர்ப்பாளரான தேனீ ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதவி அளித்தார் மூப்பனார்.
இதன் காரணமாக பாண்டிச்சேரி தமாகாவில் பெரும் புகைச்சல் இருந்து வந்தது. மூப்பனார் மீது வருத்தத்தில் இருந்த கண்ணனை இழுத்து பாண்டிச்சேரி அரசியலில்பரபரப்பை ஏற்படுத்தி விட வேண்டும் என்று திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டன.
இச் சூழ்நிலையில் கண்ணனின் தீவிர ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான ரத்தினம், ஏழுமலை, ராஜசேகர உடையார் ஆகிய மூவரும் தாங்கள் தனி அணியாகசெயல்படப் போவதாக அம்மாநில கவர்னர் மற்றும் சபாநாயகரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
அம்மாநிலத்தில் தமாகாவுக்கு மொத்தம் 7 எம்.எல்.ஏ.க்கள். அவர்களில் பாலாஜி என்பவர் நியமன எம்.எல்.ஏ. பாண்டிச்சேரி மாநில அமைச்சரும்,தமாகா தலைவருமான கண்ணன் சுயேச்சை சின்னத்தில் வென்றவர். எனவே கண்ணன் தலைமையில் இந்த மூவரும் தனி கட்சியாக செயல்படத் திட்டமிட்டுள்ளனர்என்பது தெளிவாகியுள்ளது.
கண்ணன் தலைமையிலான இந்த நால்வர் அணி தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவு அளிக்குமா என்பது மர்மமாகி உள்ளதால், சண்முகம் தலைமையிலான காங்கிரஸ்ஆட்சியின் நாட்கள் எண்ணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமாகா அமைச்சர்கள் கந்தசாமி, தேனீ ஜெயக்குமார், பாலாஜி ஆகியோர் தொடர்ந்து மூப்பனார் தலைமையில் செயல்படப் போவதாகஅறிவித்துள்ளனர்.