ராஜ்குமார் நலமாக இருக்கிறார் .. நாகப்பா
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார் காட்டில் நலமுடன் இருப்பதாக, வீரப்பன் பிடியிலிருந்து தப்பி வந்த உதவி டைரக்டர் நாகப்பா பர்வதம்மாராஜ்குமார் குடும்பத்தாரிடம் வெள்ளிக்கிழமை பிற்பகல் தெரிவித்தார்.
வீரப்பன் பிடியிலிருந்து தப்பித்து வந்த திரைப்பட உதவி டைரக்டர் நாகப்பா, காஜனூரிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் பலத்த பாதுகாப்புடன் பெங்களூருக்குக்கொண்டு வரப்பட்டார்.
அங்கிருந்து அவர் முதல்வர் இல்லமான கிருஷ்ணாவுக்குச் சென்று முதல்வர் கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசினார். பின்னர் சதாசிவநகரில் உள்ள நடிகர் ராஜ்குமார்வீட்டுக்குச் சென்றார்.
அங்கு ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, அவரது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரைச் சந்தித்தார்.அவர்களிடம் ராஜ்குமார் நலமுடன் இருப்பதாகவும், யோகா செய்து கொண்டும், மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டும் இருப்பதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, பெங்களூர் புறப்படும் முன் நாகப்பாவுக்கு சாம்ராஜ்நகரிலுள்ள தனியார் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.