பாமாயிலுக்குத் தடை கோருகிறார்கள் தென்னை வியாபாரிகள்
கோவை:
சமையல் எண்ணெய்க்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது இறக்குமதிக்கு 300 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லத்துரை கூறினார்.
கோவையில் சனிக்கிழமை தென்னை வாரிய உறுப்பினரும், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவருமான செல்லத்துரை நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
பாமாயில் இறக்குமதியால் தமிழக விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இந்த சமையல் எண்ணெய் மலிவு விலையில் கிடைப்பதால், தேங்காய்விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகி
இருக்கின்றனர். எனவே, இதனைத் தடுக்க பாமாயில் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும். அல்லது இந்த எண்ணெய் இறக்குமதிக்கு 300 சதவீதம்வரி விதிக்க வேண்டும்.
சர்க்கரை இறக்குமதிக்கு வரி விதித்ததன் விளைவாக ஓரளவு விவசாயிகளுக்கு கரும்பு விலை கட்டுபடியாகும் அளவிற்கு உயர்ந்துள்ளது. சர்க்கரைஇறக்குமதிக்கு 20 சதவீதத்திலிருந்து 60 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் விவசாயிகள் விற்பனை செய்ய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சந்தையைப் போல அதிக அளவு உற்பத்தியாகும்காய்கறியை விற்பனை செய்ய ஒட்டன்சத்திரத்தில் ரூ. 2.5 கோடி செலவில் உழவர் பெருஞ் சந்தை அமைக்க முதல்வர் கருணாநிதி ஒப்புக் கொண்டுள்ளார்.இதற்கென இங்கு 16 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் துவக்கப்படவுள்ளன.
இது தவிர, விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மின் இணைப்பு வழங்க "கறுப்பு பகுதியாகஅறிவிக்கப்பட்ட இடங்கள், தற்போது மாற்றப்பட்டு விட்டது. இந்தப் பகுதியிலும் மின்சாரம் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது என்று செல்லத்துரைகூறினார்.
பேட்டியின்போது கட்சியின் பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி உடனிருந்தார்.