வைகோ, வாழப்பாடி ராமமூர்த்தி கருத்து
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளருக்கு கிடைத்துள்ள சிறை தண்டனையை மதிமுக, தமிழக ராஜிவ் காங்கிரஸ் வரவேற்றுள்ளன. ஜனதாதளம் எதிர்த்துள்ளது.
ம.தி.மு.க. தலைவர் வைகோ:
ஜனநாயகத்தில் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், எவ்வளவு உயர்ந்த பதவி வகித்தாலும் சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம்.ஊழல் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக முன்னாள் தல்வர்ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு தனி நீதிமன்றம் 3 ஆண்டு தண்டனை தீர்ப்பு கூறியுள்ளது. இதுவரவேற்கத்தக்கது.
அதிமுக ஆட்சியில் கோடி கோடியாக கொள்ளை அடித்து ஜனநாயக மரபை காலில் போட்டு மிதித்த ஜெயலலிதாவுடன் மூப்பனார்கூட்டணி வைத்துள்ளார். இந்த தீர்ப்புக்கு பிறகு அவர் என்ன சொல்லப் போகிறார்? என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஜெயலலிதா மட்டுமல்ல, நாட்டின் பிரதமராக இருந்த நரசிம்மராவுக்கு கூட நாளை மறுநாள் நீதிமன்றத்தில் தண்டனைதரப்படவிருக்கிறது. எனவே ஊழல் செய்தவர்கள் தப்ப முடியாது.
தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி:
ஒரு முதல்வரே அரசாங்க சொத்துக்களை வாங்குவது முறைகேடு மட்டுமல்ல, அதிகார துஷ்பிரயோகம் என்பதை நீதிமன்றம்உறுதி செய்துள்ளது. ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனை மூலம் மீண்டும் நீதி நிமிர்ந்துள்ளது.
தங்கக் காசுகளை பெற்றுக் கொண்டு தங்கமான ராசாக்கள் அளித்த தீர்ப்பு குப்பைக் கூடைகளில் தூக்கி எறியப்பட்டு விட்டன.
மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் ஜி.ஏ.வடிவேலு:
இந்த தீர்ப்பு அதிர்ச்சியானது. இது இறுதியான தீர்ப்பல்ல. இதை எதிர்த்து ஜெயலலிதா அப்பீல் செய்வார். உயர் நீதிமன்றம்தண்டனை பற்றி முடிவு செய்யும். அதுவரை ஜெயலலிதா குற்றவாளி ஆக மாட்டார். அதனால் அதிமுக - ஜனதா தளம் உறவுபாதிக்காது