"5 நாட்களில் நடப்பார் வாஜ்பாய்
மும்பை:
மூட்டு வலி அறுவைச் சிகிச்சைக்குப் பின் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் இருபபதாக மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியும், வாஜ்பாய்க்கு அறுவைச்சிகிச்சை செய்த டாக்டர் சித்தரஞ்சன் ரனவத்தும் தெரிவித்துள்ளனர்.
மூட்டுவலிக்காக மும்பை பிரீச்கன்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பிரதமர் வாஜ்பாய்க்கு செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில்அறுவைச் சிகிச்சை நடந்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த அறுவைச் சிகிச்சை குறித்து அத்வானியும், ரனவத்தும் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பிரதமர் நலமுடன் உள்ளார் என்றனர்.
ரனவத் தலைமையில் நான்கு டாக்டர்கள் கொண்ட குழு அறுவைச் சிகிச்சை செய்தது. பிற டாக்டர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
ரனவத் கூறுகையில், பிரதமரின் இடது கால் மூட்டு மிகவும் தேய்ந்து போய் இருந்தது. அது தற்போது முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது. மூட்டில்உள்ள இரண்டு இணைப்பு எலும்புகளும் தேய்ந்து விட்டன.
பிரதமரின் வலது கால் மூட்டில் லேசாக தேய்வு காணப்படுகிறது. இருப்பினும் அதற்கு இப்போதைக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படாது. வழக்கமாகமூட்டு அறுவைச் சிகிச்சை செய்யும்போது இரு கால்களிலும்தான் நான் செய்வது வழக்கம். ஆனால் பிரதமரின் வயது மற்றும் உடல் நலனைக் கருத்தில்கொண்டு ஒரு காலில் மட்டுமே இப்போது செய்துள்ளோம்.
பிரதமர் வாஜ்பாய் 5 நாட்களில் நடக்கத் துவங்குவார். அறுவைச் சிகிச்சையின்போது எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. பிரதமர் நன்றாக இருக்கிறார்.
அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிரதமர் நடப்பதில் எந்தச் சிரமமும் இருக்காது. அதே போல, இன்னும் சில வாரங்களில் தனது சுற்றுப்பயணங்களைக் கூடபிரதமர் வழக்கம் போல மேற்கொள்ளலாம் என்றார் ரனவத்.
அத்வானி கூறுகையில், பிரதமரின் உடல் நிலை குறித்து ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் விசாரித்தார். அவரிடம், பிரதமர் நலமுடன் இருப்பதாக தெரிவித்தோம்என்றார்.
அறுவைச் சிகிச்சை முடிவடைந்த நிலையில், பிரதமருக்கு சில நாட்களுக்கு பிசியோதெரப்பி சிகிச்சை வழங்கப்படும். இதன் மூலம் மூட்டுப் பகுதிக்கு ரத்தஓட்டம் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும்.
பிரதமர் புதன்கிழமையே எழுந்து நிற்க முடியும் என டாக்டர் ரனவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தினசரி சிறிது நேரம் பிரதமர் நடை பயில்வார். வலிஅதிகமாக இருந்தால் மட்டும் நடப்பதைத் தவிர்க்கலாம். அடுத்த இரண்டு நாட்களுக்கு திட உணவு உட்கொள்வதை பிரதமர் தவிர்க்க வேண்டும்.
ஐ.ஏ.என்.எஸ்.