டயானா வருவதைத் தடுத்தாரா அன்னை தெரசா?
லண்டன்:
இங்கிலாந்து இளவரசி டயானா, 1995 ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து அன்னை தெரசாவை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால்அவரது வருகையை தெரசா விரும்பவில்லை என்று இங்கிலாந்தில் வெளியாகியுள்ள புத்தகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
1988 முதல் 1996 வரை டயானாவின் உதவியாளராக இருந்தவர் பேட்ரிக் ஜெப்சன். இவர் இளவரசி டயானா குறித்து ஷாடோஸ் ஆப் பிரின்ஸஸ் என்றபுத்தகத்தை எழுதியுள்ளார்.
புத்தகத்தில் டயானாவுக்கும், கணவர் இளவரசர் சார்லஸுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், அதனால் எழுந்த பிரச்சினைகள் குறித்துஎழுதப்பட்டுள்ளது. புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:
இளவரசர் சார்லசும், டயானாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதில் இருவரும் விவாகரத்துப் பெற வேண்டும் என்று முடிவு செய்திருந்தனர்.தனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டு சார்லஸை மட்டம் தட்டினார் டயானா.
விவாகரத்துப் பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன் டயானா என்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உடனடியாக கல்கத்தாசென்று அன்னை தெரசாவைப் பார்க்க வேண்டும் அதன் மூலம் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றார்.
டயானாவின் விருப்பப்படி நான், அன்னை தெரசாவின் உதவியாளரான அமெரிக்க கன்னியாஸ்திரி ஒருவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர், டயானா, அன்னைதெரசாவைச் சந்திப்பதற்காக இந்தியாவிற்கு வர வேண்டிய அவசியமில்லை. நாங்கள், லண்டனில் போதைப் பொருட்களை ஒழிக்கும் இரண்டு மையங்களைஅமைத்துள்ளோம். டயானா சேவை புரிய வேண்டும் என்று விரும்பினால், இந்த மையங்களுக்குச் செல்லலாம். அவர் அந்த மையங்களுக்கு அடிக்கடிசென்று சமூக சேவை செய்யவும் வசதியாக இருக்கும் என்று தெரசா விரும்புவதாக கூறினார்.
இதையடுத்து டயானாவின் கல்கத்தா பயணம் ரத்து செய்யப்பட்டது. டயானாவின் வருகையை ஒருவேளை தெரசா விரும்பாமல் இருந்திருக்கலாம் என்றுபுத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்திற்கு டயானாவின் மகன் இளவரசர் வில்லியம் மற்றும் அரச குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டயானாவின் விசுவாசிகள்எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இறந்த ஒருவர் குறித்து இதுபோன்ற செய்திகளை வெளியிடுவது அநாகரீகம் என்று டயானாவின் நண்பர்கள் கூறியுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.