உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தை ஏற்கவேண்டாம் .. விவசாயிகள்
பெங்களூர்:
உலக வர்த்தகக் கழக ஒப்பந்தத்தை ஏற்கவேண்டாம் என்று மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூரில் விவசாயிகளின் 5 நாள் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு கர்நாடக ராஜ்ய ரெய்தா சங்கம், கர்நாடக மாநில விவசாயிகள்சங்கம் மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக விவசாயிகளின் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. இதில், இந்தியாவின் பல மாநிலங்களையும் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் கர்நாடக ராஜ்ய ரெய்தா சங்கத் தலைவர் எம்.டி. நஞ்சுண்டசாமி பேசியதாவது:
விவசாயம் தொடர்பான புதிய நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை உலக வர்த்தகக் கழகம் வெளியிட்டுள்ளது. இவை ஒரு நாட்டின்விவசாயத்தையும், விவசாயிகளையும் கடுமையாகப் பாதிக்கும்.
ஆனால், உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் நிர்ப்பந்தம் காரணமாக உலக வர்த்தகக் கழகத்தின் நெறிமுறைகளை ஏற்று புதிய வேளாண்கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடன்சுமையால் அவர்கள் அவதிப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வேளாண்மையை தொழில்மயமாக்கும் திட்டம் உலகளாவிய அளவில் செயல்படுத்தப்பட்டாலும், விவசாயிகளின் நலன் பாதிக்கப்படக்கூடாது. விவசாயிகளின்வாழ்க்கையில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை.
ஆகவே, உலக வர்த்தகக் கழகத்தின் ஒப்பந்தத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது.
கர்நாடகத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய பம்புசெட்டுகளுக்கான மின் கட்டண பாக்கியைச் செலுத்தக்கூடாது. அரசாங்கமே அந்த பாக்கித்தொகையைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்றார் நஞ்சுண்டசாமி.
ஊர்வலத்தில் கலந்து கொண்டு பேசிய பிற விவசாயிகள் தலைவர்களும் விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். உலக வர்த்தகக் கழகத்தின்ஒப்பந்தத்தை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
வெளிநாட்டு நிறுவனங்கள் உயர் வீரிய விதைகளை உற்பத்தி செய்து அவற்றை இந்தியாவுக்குள் விற்பனை செய்வதைத் மத்திய அரசு தடை செய்யவேண்டும்என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.