ரயில் திட்டங்களில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது ..வாழப்பாடி
சென்னை:
ரயில் திட்ட நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் வாழப்பாடி ராமமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ரயில்வே நிர்வாகம் இந்த ஆண்டு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியில் 10 சதவீதம் குறைத்து ஒதுக்கியுள்ளார்கள். வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் நிதிகுறைத்து ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு மிகவும் குறைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அகல ரயில் பாதையாக மாற்ற வேண்டிய விருத்தாச்சலம்- கடலூர், விருதுநகர்-ராமேஸ்வரம் மற்றும் ஒரு சில குறுகிய ரயில் பாதைகள்அகல ரயில் பாதைகளாக மாற்றும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ளது.
பல மாநிலங்களில் அகல ரயில் பாதைகள் மாற்றும் பணி முடிந்து விட்டது. தமிழ்நாடு மட்டும் வஞ்சிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.
சென்னையிலிருந்து, மதுரைக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இது இன்னும் நிறைவேற்றப்படாததால், ரயில்வே நிர்வாகம் 10 சதவீத நிதி குறைப்பை வாபஸ் பெற்றுக் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்க முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டில் 3 வது அணி அமைந்தால் நிச்சயமாக திமுக வுக்குத்தான் அதிகமான வெற்றி வாய்ப்பு கிடைக்கும். வருகிற சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா,சசிகலா, தினகரன் ஆகியோர் போட்டியிட முடியாது.
இப்போது, சேனாதிபதி இல்லாத படையாகவும், மாலுமி இல்லாத கப்பலாகவும் அதிமுக உள்ளது என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.