நாங்கள் வளர்ந்து விட்டோம் .. கூறுகிறது புதிய நீதிக் கட்சி
சென்னை:
புதிய நீதிக் கட்சி வெகுவாக வளர்ந்து விட்டது என்று அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் புதிய நீதிக் கட்சி மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே தமிழக அரசியலில் மிகப்பெரியசக்தியாக புதிய நீதிக் கட்சி உருவாகி உள்ளது. சிறிய கிராமத்தில் கூட எங்கள் கட்சிக்கு அமைப்பு உள்ளது.
புதிய நீதிக் கட்சியில் இதுவரை 25 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். அடுத்த மாதத்திற்குள் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.தனித்து தேர்தலில் போட்டியிட்டால் எங்கள் கட்சி 50 இடங்களில் வெற்றி பெறுவோம். 120 தொகுதிகளில் எங்கள் கட்சி பலமாக உள்ளது.
வரும் 18, 19 ம் தேதிகளில் தமிழ்நாட்டில் 200 தொகுதிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம்.
வரும் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தலைமையில் 3 வது அணியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். 3 வது அணிக்கு மூப்பனார்வரவில்லையென்றால் புதிய நீதிக் கட்சி தலைமையில் 3 வது அணி அமையும்.
இப்போது எங்களுடைய புதிய நீதிக்கட்சி, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் தலைமையிலான தமிழ் தேசம் கட்சி, டாக்டர் சேதுராமன் தலைமையிலான மூவேந்தர்முன்னேற்றக் கழகம், காமாட்சி நாயுடு தலைமையிலான திராவிடர், தெலுங்கர் முன்னேற்றக் கழகம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகிறோம்.திருமாவளவனும் எங்கள் அணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் அனைவரும் சேர்ந்து 100 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் அடுத்து அமையப் போவது கூட்டணி ஆட்சிதான்.
திமுக தலைவர் கருணாநிதியை ஜெயிலில் அடைப்போம் என்று ஜெயலலிதா பேசியதற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். ஜெயலலிதா, அரசியல்வாதியாக,ஜனநாயகவாதியாக நடந்து கொள்ள வேண்டும் என்றார் சண்முகம்.