புலிகளுடன் பேசுங்கள் .. அரசுக்கு தமிழர் கட்சிகள் கோரிக்கை
கொழும்பு:
இலங்கை அரசு, புலிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழர் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இலங்கை ராணுவத்துக்கும், தமிழ் ஈழம் கோரி போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 17 ஆண்டுகளாக நடந்து வரும் சண்டையில்,ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நார்வே மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எரிக் சொல்ஹீம் தலைமையிலான நார்வே குழு, அதிபர் சந்திரிகா,விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பிரபாகரனுடன், நார்வே குழு நடத்திய பேச்சுவார்த்தையை தமிழர் கட்சிகளான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு, ஈழமக்கள் புரட்சிகர முன்னணி ஆகிய கட்சிகள் வரவேற்றுள்ளன.
இதுகுறித்து அக்கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டுத் தூதுக்குழு ஒன்றை பிரபாகரன் சந்தித்துப் பேசுவது இதுவேமுதல்முறையாகும். பிரபாகரன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பது ஆச்சரியம் தருகிறது.
புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே இலங்கை பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கை அரசு,புலிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதன் மூலம் இலங்கையில் நடைபெற்று வரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றுஅவை தெரிவித்துள்ளன.