ஏழை மாணவருக்கு ஜெ. நிதியுதவி
மதுரை:
மதுரையில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 500 க்கு 454 மதிப்பெண்கள் பெற்ற ஏழை மாணவருக்கு, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ரூ 15, 000உதவித்தொகை வழங்கினார்.
மதுரை தல்லாகுளம், கண்மாய் மேலத் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் 10 ம் வகுப்பில் 500 க்கு 454 மதிப்பெண்கள் எடுத்தார். இவர் அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா மதுரை வந்திருந்த போது அவரிடம் மனு கொடுத்தார்.
மனுவில் தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை எடுத்துக் கூறியிருந்தார். மேலும் தொடர்ந்து தொழிற்பயிற்சி பள்ளியில் படிப்பதற்கான உதவியைச்செய்யுமாறும், பகுதி நேரமாக ஹோட்டல் ஒன்றில் தான் வேலை செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஜெயலலிதா, அந்த மாணவருக்கு ரூ 15, 000 உதவித்தொகை வழங்கினார்.
மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி-ஜெ. சந்திப்பு
முன்னதாக மதுரையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் கட்சிப் பிரமுகர் ஜோதிராம் ஆகியோரை,அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
இவர்கள் தவிர அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கந்தசாமியையும் ஜெயலலிதா சந்தித்துப் பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்புஎன்று அதிமுக சார்பில் கூறப்பட்டுள்ளது.