டான்சி: ஜெ-சசி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும், தனி நீதிமன்றத்தில் ஆஜராகி,தங்கள் ஜாமீன் பத்திரங்களைத் வரும் 17 ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
டான்சி நிலப் பேர ஊழக்கில் ஜெயலலிதா, சசிகலா, முகமது ஆசிப், சீனிவாசன், நாகராஜன், கற்பூர சுந்தர பாண்டியன், ஆகியோருக்கு கடந்த மாதம் 9 ம்தேதி 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதித்து தனி நீதிபதி அன்பழகன் உத்தரவிட்டது தெரிந்ததே.
தனிநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட தண்டனை பெற்ற அனைவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மனுக்களைப் பெற்ற உயர்நீதிமன்றம் தண்டனை பெற்ற அனைவரையும், ரூ 50 ஆயிரம் சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கான இரு நபர்ஜாமீனிலும், நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மேலும் உயர்நீதிமன்றம் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்துள்ளதால் ஜெயலலிதா உள்ளிட்டோர், தனிநீதிமன்றத்தில், ஜாமீன் பத்திரங்களைத் தாக்கல்செய்ய செவ்வாய்க்கிழமை ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், முகமது ஆசிப், சீனிவாசன், நாகராஜன், கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் ஜாமீன் பத்திரங்களைத் தாக்கல் செய்தனர்.
ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் அவர்களது வக்கீல், 3 வது தனிநீதிமன்றத்தில் தனித்தனியாக இரு வழக்குகளுக்கும் மனுக்களைத் தாக்கல்செய்தனர். அந்த மனுவில், தனி நீதிமன்றத்தில் வழங்கிய தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
தனி நீதிமன்றத்தில் ஜாமீன் பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கான எந்தக் காலக் கெடுவையும் உயர்நீதிமன்றம் விதிக்கவில்லை. ஜெயலலிதாவும்,சசிகலாவும் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளதால் அவர்கள் விரைவில் ஆஜராகி ஜாமீன் பத்திரங்களைத் தாக்கல் செய்வார்கள் என்று அந்த மனுவில்கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த மூன்றாவது தனிநீதிபதி அன்பழகன் வரும் 17 ம் தேதிக்குள் ஜெயலலிதாவும், சசிகலாவும், தனி நீதிமன்றத்தில் ஆஜராகிஜாமீன் பத்திரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.