உதயமானது உத்தராஞ்சல் மாநிலம்
டெராடூன்:
இந்தியாவின் 27 வது மாநிலமான உத்தராஞ்சல் புதன்கிழமை நள்ளிரவு உதயமானது. புதிய மாநிலத்தின் கவர்னராக சுர்ஜித் சிங் பர்னாலாவும்,முதல்வராக நித்யானந்த சுவாமியும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலங்களான மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டு முறையே சட்டீஸ்கார், உத்தராஞ்சல்,ஜார்க்கண்ட் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
இவற்றில் சட்டீஸ்கார் மாநிலம் கடந்த 1 ம் தேதி உருவாக்கப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை நள்ளிரவு உத்தராஞ்சல் மாநிலம் உதயமானது. வரும்15 ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் உருவாகிறது.
புதன்கிழமை நள்ளிரவு தோன்றிய உத்தராஞ்சல் மாநிலத்தில் மொத்த மக்கள்தொகை 80 லட்சம். இதன் தலைநகராக டெராடூன் செயல்படும்.டெராடூனில் புதன்கிழமை புதிய கவர்னர், புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவையினரின் பதவியேற்பு விழா நடந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு டெராடூனிலுள்ள அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுப்பு நடந்தது.
உத்தராஞ்சல் கவர்னராக சுர்ஜித் சிங் பர்னாலா பதவியேற்றார். பின்னர் அவர் புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட நித்யானந்த சுவாமிக்குபதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
புதிய அரசு பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
உத்தராஞ்சல் ஒரு கண்ணோட்டம்:
தலைநகர்: டெராடூன்
மக்கள்தொகை: 80 லட்சம்
மாவட்டங்கள்: 13
பரப்பளவு: 53 ஆயிரத்து 178 சதுர கிலோமீட்டர்