இந்தியாவை வல்லரசாக ஆக்குவோம்.. பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோயில்:
300 எம்.பி.க்கள் கொடுத்தால் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டுவதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி பொன். ராதாகிருஷ்ணன்கூறியிருக்கிறார்.
நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் நல்ல ஆட்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டு தமிழகத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சிசார்பில் தாமரை யாத்திரை என்ற பெயரில் ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த யாத்திரை தொடங்கியது. ரத யாத்திரை மேல சங்கரன் குழிக்கு வந்தபோது மத்திய அமைச்சர் பேசினார். அவர்பேசுகையில், காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற பல ஊழல்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டு தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
கிரிக்கெட்டில் ஊழல் செய்தவர்கள் சி.பி.ஐ. மூலம் கண்டு பிடிக்கப்பட்டு மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளனர் .நரசிம்மராவ் போன்றவர்கள்சிறைக்கு சென்றுள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சியில் 10 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கான வட்டி மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய்கட்டப்படுகிறது.
விளையாட்டுத்துறையில் இழப்பு இருந்தாலும் அடுத்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை வெல்வோம்.
வாஜ்பாய் ஆட்சியில் தான் தீவிரவாதங்கள் ஒடுக்கப்பட்டுள்ளன. நாங்கள் செய்த சாதனைகளைக் கூறிதான் மக்களிடம் ஓட்டு கேட்போம். எம்.ஜி.ஆர்.ஆட்சி, காமராஜ் ஆட்சி எனத் கூறி கேவலமாக அரசியல் நடத்துபவர்கள் போல் கேட்காமல் வாஜ்பாய் தலைமையில் நல்லாட்சி தருகிறோம்என்றுதான் மக்களிடம் ஓட்டு கேட்போம்.
ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியில் 50 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம். எங்களுக்கு 300எம்.பி.க்களை தந்தால் இந்தியாவை வல்லரசாக மாற்றி காட்டுகிறோம். வரவிருக்கும் தேர்தலில் தாமரை சின்னத்திற்கோ அல்லது தாமரைகூறும் சின்னத்திற்கோ வாக்களியுங்கள் என்றார்.