சிங்கப்பூர் திருடன் கோவையில் கைது
கோவை:
கோவையில் பல நகைக் கடைகளில் திருடிய சிங்கப்பூரைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் நகைக் கடைகளை குறி வைத்து நூதன முறையில் திருடி வந்த கும்பலைப் போலீசார் தேடி வந்தனர்.உடுமலைப் பேட்டையில் ஒரு நகைக் கடையில் திருட முயன்ற இரண்டு பெண்களைப் போலீசார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போதுதுப்பாக்கியால் சுட்டு இரண்டு பெண்களும் மாருதி காரில் மீட்டுச் செல்லப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ்காரர் காயமடைந்தார்.
திருப்பூரில் பட்டப் பகலில் நகை கடைக்கு வந்த மூன்று பெண்கள் நூதன முறையில் 60 பவுன் நகைகளைக் கொள்ளையடித்து விட்டு மாருதிக் காரில் தப்பினர்.இதே போன்று பெட்ரோல் பங்க், மளிகைக் கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் கடை என பல இடங்களில் இந்தக் கும்பல் தங்களது கை வரிசையைக்காட்டியுள்ளது.
இதில் கைது செய்யப்பட்டுள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த ராஜ்குமார், ஏற்கனவே சிங்கப்பூரில் 5 கோடி ரூபாய் அளவிற்கு கொள்ளையடித்து மாட்டிக் கொண்டார்.நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார், மலேசியாவிற்குத் தப்பி ஓடினார். அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிற்குள் வந்தார்.
இங்கு தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் தங்கி கடந்த நான்கு ஆண்டுகளாக தனது கை வரிசையைக் காண்பிக்கத் தொடங்கினார். உடுமலைப் பேட்டையில்தங்கியிருந்தபோது நூர்ஜஹான் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவருக்கு உடுமலைப் பகுதியில் தளி என்ற இடத்தைச் சேர்ந்தகுணசேகரன் என்பவர் உதவி செய்து கூட்டாளியாக மாறினார்.
உடுமலைப் பேட்டையிலிருந்து கோவை வந்த ராஜ்குமார், வடவள்ளி என்ற இடத்தில் உள்ள திருமுருகன் நகர் என்ற இடத்தில் தனது மனைவி நூர்ஜஹான்,தங்கை ஸ்ரீவித்யா மற்றும் குணசேகரனுடன் தங்கியிருந்தார். நாய் வியாபாரம் செய்வதாகக் கூறி அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்துள்ளார். இதனால்யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
இந்நிலையில், உடுமலையில் துப்பாக்கியால் போலீசாரைச் சுட்டு தப்பியதால் மாட்டிக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகவல்தருவோருக்கு பரிசு தருவதாக எஸ்.பி அறிவித்தார். மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க 20 தனிப் படையை அமைத்தார்.
இதையடுத்து இவர்களை கோவை அருகே உள்ள வடவள்ளியில் போலீசார் சுற்றி வளைத்து க் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 60 பவுன் தங்க நகைகள், 3டி.வி.க்கள், உட்பட 8 லட்சம் மதிப்புள்ள பொருட்களைக் கைப்பற்றினர். இந்த பொருட்களுடன் இரண்டு தோட்டாக்கள் கொண்ட ஒரு ரிவால்வாரையும்பறிமுதல் செய்தனர். வியாபாரத்திற்காக 8 நாய்களும் இந்த வீட்டில் இருந்தன.
ஒரே மாருதிக் காரில் பல்வேறு நம்பர் பிளேட்டுகளை இவர் பயன்படுத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.